நிய்யத்தைப் பொறுத்தவரை மனதால் நினைப்பதுதான் அடிப்படையாகும். உம்ராவுக்கான நிய்யத்தில் மாத்திரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக் உம்ரத்தன்" (இறைவா உனக்காக நான் உம்ரா செய்கிறேன்) என்ற வார்த்தையை வாயால் மொழியக் கற்றுத் தந்துள்ளார்கள். ஆனால், உள்ளத்தில் எந்த எண்ணமும் இன்றி வெறும் வாயால் மட்டும் சொல்வதனால் அது நிய்யத் ஆகாது; தான் உம்ரா செய்யப் போகிறோம் என்ற எண்ணம் மனதில் உறுதியாக இருக்க வேண்டும், அதோடு வாயாலும் மொழிய வேண்டும்.
நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?
இஹ்ராம் ஆடை அணியும் போதோ குளிக்கும் போதோ உம்ரா செய்யப் போகிறோம் என்ற எண்ணம் (நிய்யத்) மனதில் இருக்க வேண்டும். ஆனால் "லப்பைக் உம்ரத்தன்" என்ற வார்த்தையை எப்போது மொழிய வேண்டும் என்றால், குளித்து இஹ்ராம் ஆடை அணிந்து வாகனத்தில் ஏறிய பின்னரே சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிய பின்னரே இவ்வாறு தல்பியா சொன்னார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். வாகனத்தில் ஏறுவதற்கு முன் சொல்வதும் தவறல்ல; ஆனால் வாகனத்தில் ஏறிய பின் சொல்வதே முறையான சுன்னாவாகும்.