இறந்தவர்களுக்காக உறவினர்கள் ஒப்பாரி வைத்து (ஓலமிட்டு) அழுவதன் காரணமாக ஜனாஸா வேதனை செய்யப்படுகிறது என்று ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் அந்த அழுகை ஜனாஸாவிற்குத் தெரியும் என்பதற்கு எந்த மார்க்க ஆதாரமும் இல்லை. மற்றவர்கள் அழுவதற்காக இறந்தவர் ஏன் வேதனை செய்யப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வி பலருக்கும் எழலாம்.
இதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மார்க்கத்துக்கு முரணான விஷயங்களைச் செய்ய வாய்ப்பிருக்கும் தனது குடும்பத்தினருக்கு, "நான் இறந்த பின் ஓலமிட்டு அழக்கூடாது, நெருப்பைக் கொண்டு வரக்கூடாது" என்று வஸிய்யத் (மரண சாசனம்) செய்துவிட்டுப் போவது ஒரு முஸ்லிமின் கடமையாகும். அவ்வாறு வஸிய்யத் செய்யாமல், அவர்கள் பித்அத்தான முறையில் தன்னை அடக்குவார்கள் அல்லது சத்தமிட்டு அழுவார்கள் என்று தெரிந்தும் அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டுப் போகிறவருக்குத்தான் இந்தத் தண்டனை கிடைக்கும்.
குடும்பத்தினர் தவறு செய்வார்கள் என்று தெரிந்தும் அதைத் தடுக்காமல் மரணித்தவரே இங்கு குற்றவாளியாகிறார். ஒருவேளை தான் முறையாக வஸிய்யத் செய்தும் குடும்பத்தினர் மீறி அழுதால், இறந்தவருக்கு அந்த வேதனையோ தண்டனையோ கிடைக்காது. தனது மரணத்திற்குப் பின் கடனை அடைக்க வஸிய்யத் செய்யாமல் போனால் எப்படிக் குற்றமோ, அதேபோன்றுதான் இந்த எச்சரிக்கையைச் செய்யாமல் மரணிப்பதும் குற்றமாகும் என்று புரிந்துகொண்டால் இதில் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு எவ்வித முரண்பாடும் இல்லை.