உயிருள்ள உருவங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை ஒரு முஸ்லிம் எப்பொழுதுமே அணியக் கூடாது. உருவமுள்ள திரைச்சீலையைக் கண்டுகூட ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழையாமல் திரும்பிச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். "உருவங்களை உருவாக்குபவர்கள் நாளை மறுமையில் வேதனை செய்யப்படுவார்கள், நீங்கள் படைத்ததை உயிர்ப்பியுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்" என்று ஹதீஸ்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.
எனவே உருவம் பொறிக்கப்பட்ட ஆடைகளை நாம் அணியவோ, வரையவோ அல்லது அலங்காரமாகப் பயன்படுத்தவோ கூடாது. இது தொழுகையில் மட்டும் கூடாது என்பதல்ல; தொழுகை அல்லாத சாதாரண நேரங்களிலும் இது கூடாது. தொழுகையில் அணியும்போது அதன் தடை இன்னும் வன்மையாக வலியுறுத்தப்படுகிறது. உருவங்களைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் ஒரு பெரிய பாவமாகக் கருதப்படுவதால், இது முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும்.