ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் ஒழுங்குமுறைகள் என்ன?

பெயர் சூட்டுதல் குழந்தை இஸ்லாமிய பெயர்கள் அல்லாஹ்

← முந்தையஅடுதது →
கேள்வி
இஸ்லாமிய வழிகாட்டலின் அடிப்படையில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் ஒழுங்குமுறைகள் என்ன?
பதில்
பதில்:

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு இஸ்லாம் சில தெளிவான வரைமுறைகளையும் ஒழுங்குகளையும் கற்றுக் தந்துள்ளது:

1. ஷிர்க்கான (இணைவைப்பு) பெயர்களைத் தவிர்த்தல்:
அப்துல் முத்தலிப், ஷாகுல் ஹமீது (மன்னர்களுக்கெல்லாம் மன்னர்) போன்ற பெயர்கள், அல்லது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான ஹாலிக் (படைப்பாளன்), ராஸிக் (உணவளிப்பவன்) போன்ற பெயர்களை மனிதர்களுக்கு நேரடியாக வைக்கக் கூடாது. அல்லாஹ்வுக்கு அடிமை என்று பொருள்படும் அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அப்துல் முஹைமின், அப்துல் மலிக் போன்று 'அப்து' எனச் சேர்த்தே வைக்க வேண்டும்.

2. அந்நிய மத, அநியாயக்காரர்களின் அடையாளப் பெயர்களைத் தவிர்த்தல்:
ஃபிர்அவ்ன், காரூன், நும்ரூத் போன்ற அநியாயக்காரர்களின் பெயர்களையோ, அல்லது இப்லீஸ், ஷைத்தான் போன்ற மோசமான அடையாளங்களைக் கொண்ட பெயர்களையோ வைக்கக் கூடாது. அதேபோல, சினிமா நடிகைகள் அல்லது கெட்ட மனிதர்களின் பெயர்களாகப் பிரபல்யமானவைகளையும் தவிர்க்க வேண்டும்; ஏனெனில், அந்தப் பிள்ளை வளரும் போது தன் பெயரைக் கொண்ட அந்தத் தவறான நபர்களை முன்மாதிரியாக நினைக்கும் உளவியல் தாக்கம் ஏற்படலாம்.

3. வெறுக்கத்தக்க அல்லது கெட்ட அர்த்தம் தரும் பெயர்களைத் தவிர்த்தல்:
ஆமை, கரடி, சிங்கம், புலி, நாய் (கல்ப), கழுதை (ஹிமார்) போன்ற மிருகங்களின் பெயர்கள் சில அரபு வழக்கங்களில் வீரத்துக்காக வைக்கப்பட்டாலும், சமூகத்தில் மதிக்கப்படாத மிருகங்களின் பெயர்களைத் தவிர்க்க வேண்டும். அதுபோல, 'ஹர்ப்' (யுத்தம்), 'ரஸாஸ்' (ஈயம்), 'ஹதீத்' (இரும்பு) போன்ற வன்மையான, அல்லது பெண்களின் உடல் அங்கங்களை/கவர்ச்சியை வர்ணிக்கக்கூடிய பெயர்களை (கெட்ட எண்ணங்களைத் தூண்டும் என்பதால்) முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும்.

4. தன்னைத் தானே தூய்மைப்படுத்தும் (தஸ்கியா) பெயர்களைத் தவிர்த்தல்:
நூருத்தீன் (மார்க்கத்தின் ஒளி), ஷம்சுத்தீன் (மார்க்கத்தின் சூரியன்), ஷம்சுல் இஸ்லாம், தக்கியுத்தீன் (மார்க்கத்தில் இறையச்சமுடையவர்) போன்ற பெயர்கள் ஒருவரை அளவுக்கு மீறித் தூய்மைப்படுத்துவதால் இமாம்கள் இதை வெறுத்துள்ளார்கள் (இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் தனது தக்கியுத்தீன் என்ற பெயரை வெறுத்தார்கள்). இது ஹராம் இல்லை என்றாலும் தவிர்க்கப்பட வேண்டியது. அதுபோல, ரஹ்மத்துல்லாஹ் (அல்லாஹ்வின் அருள்), அத்தாஉல்லாஹ் (அல்லாஹ்வின் அன்பளிப்பு), ஹஸ்புல்லாஹ் போன்ற பெயர்களை வைப்பதையும், 'தாஹா', 'யாஸீன்' போன்ற குர்ஆன் அத்தியாயங்களின் ஆரம்ப எழுத்துக்களை (இவை நபியின் பெயர்கள் என்ற தவறான நம்பிக்கையில்) வைப்பதையும் அறிஞர்கள் வெறுத்துள்ளார்கள்.

5. அவ சகுனத்தை ஏற்படுத்தும் பெயர்களைத் தவிர்த்தல்:
ரசூல் (ஸல்) அவர்கள் அஃப்லஹ், ரபாஹ், யஸார், நாஃபிஉ, நஜாஹ் போன்ற பெயர்களைக் கொண்டவர்களை வேலையாட்களாக வைப்பதைத் தடுக்க நினைத்தார்கள். (உதாரணமாக 'நஜாஹ் - வெற்றி' இருக்கிறதா என்று கேட்கும்போது, அவர் இல்லாவிட்டால் 'வெற்றி இல்லை' என்று சொல்ல நேரிடும்; அது அவசகுனச் சிந்தனையைத் தரும்). இது ஹராம் அல்ல, ரசூலுல்லாஹ் முழுமையாகத் தடை செய்யவுமில்லை, ஆனால் தவிர்க்கப்படுவது நல்லது.

6. சிறந்த பெயர்களைச் சூட்டுதல்:
ரசூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்களாக 'அப்துல்லாஹ்', 'அப்துர் ரஹ்மான்' ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். அடுத்த தரமாக, இறைவனின் மற்ற பெயர்களோடு 'அப்து' என இணைத்து அப்துல் அஸீஸ், அப்துல் கரீம், அப்துல் இலாஹ், அப்துஸ் ஸலாம் என வைப்பது சிறந்தது.

7. நபிமார்கள் மற்றும் சாலிஹானவர்களின் பெயர்களைச் சூட்டுதல்:
இப்ராஹீம், மூஸா, ஈஸா, நூஹ் போன்ற நபிமார்கள் மற்றும் சிறந்த மனிதர்களின் பெயர்களைச் சூட்டுவது மிகவும் வரவேற்கத்தக்கது. இது பனூ இஸ்ரவேலர்களிடமும் இருந்த நல்ல வழமை.

8. நல்ல அர்த்தமுள்ள பெயர்களைச் சூட்டுதல்:
உள்ளத்தில் நல்ல ஆர்வத்தையும் பெருமிதத்தையும் ஊட்டக்கூடிய நல்ல வார்த்தைகளை ரசூல் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். 'ஹஸன்' (பாறை) என்ற கடினமான பெயரை 'ஸஹ்ல்' (இலகுவானவர்) என்று மாற்றியதைப் போல, நல்ல அர்த்தமுள்ள பரக்கத்தான பெயர்களைச் சூட்ட வேண்டும். குழந்தைகளுக்கு இரண்டு பெயர்களைச் சேர்த்து வைப்பது மார்க்கத்தில் தடை இல்லை என்றாலும், நடைமுறையில் ஒரு பெயரை மட்டுமே அழைப்போம் என்பதால் அது தேவையற்ற ஒன்றாகும்.

9. பெயர் சூட்டும் வைபவங்கள்:
குழந்தை பிறந்தவுடன் அல்லது கையில் எடுத்தவுடன் தாராளமாகப் பெயரைச் சூட்டிவிடலாம். இதற்காக ஒரு ஆலிமை அழைத்துவந்து ஓதிப் பெயர் சூட்ட வேண்டும் என்றோ, தஹ்னீக் செய்துதான் பெயர் சூட்ட வேண்டும் என்றோ, பெரிய வைபவம் செய்ய வேண்டும் என்றோ மார்க்கத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை. இது போன்ற பித்அத்தான நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும்.

← முந்தையஅடுதது →