இத்தா இருக்கிற நேரத்தில் வெள்ளை ஆடை தான் அணிய வேண்டும், இருட்டறையில் இருக்க வேண்டும், சிறு பிள்ளைகளுடன் பேசக்கூடாது, சொந்த மகனுடன் பேசக்கூடாது, ஆண்கள் கண்ணில் படக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் அறியாமைக் காலத்துடைய (ஜாஹிலிய்யத்) பழக்கவழக்கங்களாகும்.
கணவன் இறந்த பெண், நான்கு மாதம் பத்து நாட்கள் கணவனை நினைத்துத் திருமணம் முடிக்காமல் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்பது தான் இஸ்லாமியச் சட்டமாகும். எப்பொழுதும் துக்கம் அனுசரிப்பது மூன்று நாட்கள் தான், ஆனால் மனைவியைப் பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்மணிக்கு இத்தா நேரத்தில் கண் வலி வந்துவிட்டது. அதற்காக சுர்மா (கண் மை) போட்டுக்கொள்ளலாமா என நபிகளாரிடம் கேட்டபோது, "சுர்மா போடக்கூடாது" என்று நபிகளார் கூறினார்கள். எனவே இத்தா இருக்கும் பெண்கள் சுர்மா இடுவது போன்ற அலங்காரங்கள் செய்யக்கூடாது. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு வருட காலம் இருட்டறைக்குள்ளேயே இருப்பார்கள், குளிக்க மாட்டார்கள், அசிங்கமான ஆடைகளை அணிவார்கள். ஆனால் இஸ்லாம் இந்த 1400 வருடங்களுக்கு முன்பே இவ்வளவு அழகாகப் பெண்ணுரிமையைப் பேசி, நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டும் திருமணம் முடிக்கக் கூடாது, அலங்காரம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை மட்டுமே வழங்கியுள்ளது.
சுர்மா இடுவது, ஒட்டுமுடி வைப்பது போன்ற எதற்கும் நபிகளார் சலுகை வழங்கவில்லை. எனவே, நான்கு மாதம் பத்து நாட்கள் திருமணம் முடிக்கக் கூடாது, அந்நிய ஆண்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், அலங்கரிக்கக் கூடாது. இவ்வளவு தான் சட்டம். இதைத் தவிர்த்து வீட்டில் உள்ள பிள்ளைகளோடு பேசக்கூடாது, பார்க்கக்கூடாது என்பதெல்லாம் முற்றிலும் பிழையான நம்பிக்கைகளாகும்.