முஸ்லிம் கிரந்தத்தில் ஒரு செய்தி வருகிறது, "ஸலாத்துல் அவ்வாபீன்" அதாவது ஒட்டகக் குட்டி சூடு ஏறுற நேரத்தில் (வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில்) அந்த சூடு தாங்காமல் எழும்பும் நேரத்தில் தொழுகிற தொழுகைதான் ஸலாத்துல் அவ்வாபீன் என்று வருகிறது.
ஆனால், சிலர் மஹ்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையில் தொழுகிற தொழுகைக்கும் "அவ்வாபீன் தொழுகை" என்று சொல்லுவார்கள். இதற்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படையுமில்லை. அது முஸ்லிம் கிரந்தத்தில் வரக்கூடிய ஒரு பலகீனமான (ழயீஃப்) செய்தியாகும். அதன் அறிவிப்பாளர் வரிசையில் பிரச்சனை உள்ளது.
துஹா தொழுகையைப் பொறுத்தவரைக்கும், சூரியன் உதித்து கொஞ்சம் உயர்ந்ததிலிருந்து, சூரியன் நடு உச்சிக்கு வரும் வரைக்கும் தொழலாம். நடு உச்சியில் தொழக்கூடாது. இதுதான் துஹாவிற்குரிய நேரமாகும். "இஷ்ராக்" என்ற பெயரில் தனியாக ஒரு தொழுகை மார்க்கத்தில் இல்லை. சூரியன் உதித்து உயர்ந்த பின்னர் தொழுவது துஹா தொழுகைதான்.
"யார் பஜ்ர் தொழுதுவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்திருந்து சூரியன் உதித்த பின்னர் இரண்டு ரக்அத் தொழுகிறாரோ அவருக்கு ஒரு பூரணமான ஹஜ், உம்ராவுடைய கூலி கிடைக்கும்" என்று வரக்கூடிய செய்தி பலகீனமான (ழயீஃப்) செய்தியாகும். இஸ்லாமியச் செய்திகளைப் பார்த்தீர்கள் என்றால், சின்ன அமல்களுக்கு மிகப்பெரிய கூலிகள் என்று வரக்கூடிய செய்திகள் குறைவு. ரமலானில் உம்ரா செய்தால் ஹஜ் செய்த கூலி கிடைக்கும் என்று ரசூலுல்லாஹ் கூறியுள்ளார்கள். ஆனால் வீட்டிலோ பள்ளியிலோ இரண்டு ரக்அத் தொழுதால் ஹஜ், உம்ரா கூலி கிடைக்கும் என்று உறுதியான ஆதாரங்கள் இல்லை. இது பலகீனமான செய்தியாகும்.
இந்த இஷ்ராக் என்று பெயர் வைத்து தொழுகின்ற தொழுகையின் நேரம் துஹாவுடைய நேரத்தின் ஆரம்பமாகும். சூரியன் உதித்து உயர்ந்ததிலிருந்து நடு உச்சிக்கு வரும் வரைக்கும் உள்ள நேரம் துஹாவுடைய நேரமாகும். இதில் நாம் எட்டு ரக்அத் வரைக்கும் தொழலாம். ரசூல் (ஸல்) அவர்கள் மக்காவில் உம்மு ஹானி (ரழி) அவர்களுடைய வீட்டில் எட்டு ரக்அத் தொழுததாக செய்தி உள்ளது. எனவே, எட்டோடு நிறுத்திக்கொள்வது சிறந்தது. இதுவே துஹா மற்றும் அவ்வாபீன் தொழுகை பற்றிய சரியான விளக்கமாகும்.