ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெண்கள் அணிகின்ற (பயன்படுத்தும்) தங்க நகைகளுக்கும் ஸகாத் கடமையா? இது குறித்து சஹாபாக்கள் மற்றும் இமாம்களின் நிலைப்பாடு எ

ஸகாத் தங்கம் வெள்ளி பாவிக்கும் நகை

← முந்தையஅடுதது →
கேள்வி
பெண்கள் அணிகின்ற (பயன்படுத்தும்) தங்க நகைகளுக்கும் ஸகாத் கடமையா? இது குறித்து சஹாபாக்கள் மற்றும் இமாம்களின் நிலைப்பாடு என்ன?
பதில்
பதில்:

பெண்கள் அணிகின்ற (பயன்படுத்தும்) தங்க மற்றும் வெள்ளி நகைகள் 85 கிராம் (அதாவது 10.5 பவுன்) என்ற நிசாப் அளவை அடைந்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால், ஒவ்வொரு வருடமும் அவற்றுக்கு 2.5 சதவீதம் ஸகாத் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும் என்பதே மிகச் சரியான மார்க்க நிலைப்பாடாகும்.

இந்த விஷயத்தில் சஹாபாக்கள் காலத்திலிருந்தே கருத்து முரண்பாடுகள் இருந்தன என்பது உண்மையே. அன்னை ஆயிஷா (ரழி), இப்னு உமர் (ரழி), அஸ்மா (ரழி) போன்றோர் தாங்கள் பொறுப்பேற்றிருந்த அனாதைகளின் பாவிக்கும் நகைகளுக்கு ஸகாத் கொடுக்கவில்லை என்ற செய்திகள் காணப்படுகின்றன. ஆனால், இதற்கு மாற்றமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அணிகின்ற நகைகளுக்கும் கட்டாயம் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நகைளுக்கு ஸகாத் கொடுக்கவில்லை என்று வந்தாலும், அவர்களது நகைகள் மிகக் குறைவாக (நிசாபை அடையாத அளவு) இருந்தன என்றும் சில அறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

நடைமுறையில், வியாபாரத்திற்கு வைக்கப்படாத, வீட்டில் சேமிப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகளுக்கும் நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதில் அனைத்து அறிஞர்களுக்கும் ஏகோபித்த கருத்து உள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் "தங்கத்திற்கும் வெள்ளிக்கும் ஸகாத் கொடுங்கள்" என்று பொதுப்படையாகவே கட்டளையிட்டுள்ளார்கள். எனவே சேமிப்பு நகைகளுக்கு தங்கம் என்ற அடிப்படையில் ஸகாத் கடமையாகும் என்றால், அணிகின்ற நகைகளுக்கும் அதே சட்டம் தான் பொருந்தும். ஒரு நகை பயன்படுத்தும் நகையா அல்லது பயன்படுத்தாத நகையா என்பதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தெளிவான வரைவிலக்கணமும் (Definition) கிடையாது.

சிலர் வீடுகள் மற்றும் வாகனங்களை பயன்படுத்துவதால் அவற்றுக்கு ஸகாத் இல்லை, எனவே பயன்படுத்தும் நகைகளுக்கும் ஸகாத் இல்லை என்று ஒப்பிடுகிறார்கள் (கியாஸ் செய்கிறார்கள்). இது முற்றிலும் தவறான வாதமாகும். ஏனென்றால் இஸ்லாம் வீடு, வாகனம், இயந்திரங்கள் போன்ற எந்த பொருட்களுக்கும் அடிப்படையில் ஸகாத்தை கடமையாக்கவில்லை; அவற்றை வியாபாரப் பொருளாக மாற்றினால் மட்டுமே அவற்றுக்கு ஸகாத் கடமையாகும். ஆனால், தங்கம் மற்றும் வெள்ளியைப் பொறுத்தவரை அவைகள் வியாபாரப் பொருளாக ஆக்கப்பட்டாலும் சரி அல்லது வீடுகளில் சாதாரணமாக வைக்கப்பட்டாலும் சரி, அதன் மூலப் பொருளுக்கே (தங்கம்/வெள்ளி என்பதற்கே) இஸ்லாம் ஸகாத்தை கடமையாக்கியுள்ளது.

மேலும், ஸஹீஹ் புகாரியில் ஒரு தெளிவான சம்பவம் பதிவாகியுள்ளது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடத்தில் உள்ள ஆபரணங்களுக்குரிய தர்மத்தை (ஸகாத்தை) என் ஏழைக் கணவருக்கும் நான் பொறுப்பேற்றுள்ள அனாதைகளுக்கும் வழங்கலாமா? அது நிறைவேறுமா?" என்று கேட்டார்கள். இதற்கு நபிகளார், "ஆம், கொடுக்கலாம்" என்று பதிலளித்தார்கள். அணிகின்ற ஆபரணங்களுக்கு ஸகாத் கடமை இல்லை என்றால், அந்தப் பெண்மணி அவ்வாறு வந்து கேட்டிருக்க மாட்டார்கள். இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) போன்ற மாபெரும் அறிஞர்கள் "முஹல்லா" போன்ற நூல்களிலும், இதற்கெனத் தனியாக எழுதிய "ஸகாத்துல் ஹுலிய்" என்ற நூலிலும் பாவிக்கும் நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை மிக வலுவாக நிரூபித்துள்ளார்கள். எனவே, பயன்படுத்தும் நகைகளுக்கும் கட்டாயம் வருடா வருடம் ஸகாத் கொடுத்தாக வேண்டும்.

← முந்தையஅடுதது →