பெண்கள் பள்ளிவாசலுக்குள் தொழுதால் மட்டுமே பள்ளிவாசலுக்குள் தொழுத அதியுயர் நன்மையை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். பள்ளிவாசலுக்கு வெளியில் உள்ள ஒரு மண்டபத்தில் (Hall) அவர்கள் தொழும் போது, அவர்களுக்கு ஜமாஅத்தாகத் தொழுத நன்மை கிடைக்குமே தவிர, பள்ளியினுள் தொழுத சிறப்பான நன்மை அங்கு கிடைக்காது.
ஆனால், இட நெருக்கடி அல்லது தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளில், ஜமாஅத் தொழுகையைத் தொடர்வதற்காகப் பள்ளிவாசலுக்குள்ளேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் ஒரு திரை (Partition) போட்டுப் பிரித்துத் தொழுவது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதேயாகும். உதாரணமாக, மேல்மாடி மற்றும் கீழ்மாடி முழுமையாக நிரம்பிவிட்ட நிலையில், தவிர்க்க முடியாமல் பெண்கள் ஒரு பிரத்தியேகமான இடத்தில் இருந்து இமாமைப் பின்பற்றித் தொழுவதில் எவ்விதத் தவறும் இல்லை. இது ஜமாஅத் தொழுகைக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மேலும், தற்காலத்தில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை முழுமையாகப் பேணாத சில பெண்களும் பள்ளிவாசலுக்கு வரக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. அவர்கள் முறையான இஸ்லாமிய ஆடையின்றி பொது இடங்களில் வருவது ஒரு பித்னாவாக (குழப்பமாக) மாறிவிடக் கூடும் என்பதால், பெண்களுக்கென்று ஒரு தனிப் பகுதியை ஒதுக்கித் திரை போட்டுப் பிரிப்பது தவறல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் எவ்விதத் திரையும் இன்றித் தொழுதாலும், பெண்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டார்கள். மேலும் நபிகளார், "இந்தப் பள்ளிவாசலின் கதவைப் பெண்களுக்காக மாத்திரம் பிரத்தியேகமாக விட்டால் நன்றாக இருக்குமே" என்று ஒரு ஆலோசனையைச் சொன்னார்கள். அதன் அடிப்படையில் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் அந்தக் கதவின் ஊடாகப் பள்ளிக்குள் நுழைவதைத் தவிர்த்துக்கொண்டார்கள். இன்றைக்கும் மதீனா பள்ளிவாசலில் "பாபுந் நிஸா" (பெண்கள் கதவு) என்று இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
எனவே, பெண்களின் ஒழுக்கத்தைப் பேணுவதற்காகவும், இட நெருக்கடிக்காகவும் பள்ளியில் ஒரு திரையைப் போட்டுத் தனிப்பகுதியாகப் பிரித்து ஜமாஅத்தில் இணைவது மார்க்க ரீதியாகச் சரியானதேயாகும்.