நாணய மாற்று (Money Exchange) வியாபாரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையிலான பரிமாற்றமாக இது நடைபெற்றது. தற்காலத்தில் பயன்படுத்தப்படும் காகித நாணயங்கள் (Currencies) அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியின் மாற்று வடிவங்களாகவே இஸ்லாமியப் பொருளியலில் கருதப்படுகின்றன. அத்தகைய நாணய மாற்று வியாபாரத்திற்கு இஸ்லாம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
1. ஒரே வகையான நாணயங்களுக்கு இடையிலான பரிமாற்றம்:
உள்ளூர் நாணயத்தை அதே உள்ளூர் நாணயத்திற்கு (உதாரணமாக ரூபாய்க்கு ரூபாய், ரியாலுக்கு ரியால்) மாற்றுவதாக இருந்தால் இரண்டு நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்.
* உடனடிப் பரிமாற்றம் (On the spot / Hand to hand): பணத்தைக் கொடுத்த அந்த இடத்திலேயே பரிமாற்றம் நடந்துவிட வேண்டும்.
* சம அளவு (Equal Value): இரண்டு பக்கமும் அளவு சமமாக இருக்க வேண்டும். உதாரணமாக, 10,000 ரூபாய் பெறுமதியான ஒரு செக்கை (Cheque) உடனடியாகப் பணமாக மாற்றுவதற்காக, 1000 ரூபாயைக் கழித்துக்கொண்டு 9,000 ரூபாயாகப் பெற்றால் அது அப்பட்டமான வட்டியாகும். அதேபோன்று, பழைய தங்க நகையைக் கொடுத்து புதிய தங்க நகை வாங்கும் போது, பழைய 5 பவுனைக் கொடுத்து புதிய 4 பவுனை நேரடியாக வாங்கக் கூடாது. பழையதை விற்றுப் பணமாக்கிவிட்டே புதியதை வாங்க வேண்டும். இதை மீறினால் அது "ரிபா அல்-ஃபழ்ல்" (பரிமாற்ற வட்டி) என்ற பெரும் குற்றமாகும்.
2. வெவ்வேறு வகையான நாணயங்களுக்கு இடையிலான பரிமாற்றம்:
ஒரு நாட்டு நாணயத்தை இன்னொரு நாட்டு நாணயத்திற்கு (உதாரணமாக ரூபாய்க்கு ரியால், டாலருக்கு ரூபாய்) மாற்றுவதாக இருந்தால், பரிமாற்றப்படும் அளவுகள் வித்தியாசப்படுவதில் எவ்விதத் தவறுமில்லை. நாணய மாற்று வீதத்திற்கு (Exchange Rate) ஏற்ப லாபம் வைத்து விற்பனை செய்யலாம். ஆனால், உடனடிப் பரிமாற்றம் (On the spot) என்ற நிபந்தனை மாத்திரம் இங்கு கட்டாயம் பேணப்பட வேண்டும்.
வங்கிப் பரிமாற்றங்களில் "உடனடி" (On the spot) என்பதன் விளக்கம்:
தற்கால வங்கி நடைமுறைகளில், நாம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பணத்தை மாற்றும் போது (Telegraphic Transfers / Western Union), நாம் பணத்தைச் செலுத்திய அடுத்த நிமிடமே அது பெறுநரின் கைக்குச் சென்று சேர்வதில்லை; சில மணிநேரங்களோ அல்லது ஒரு நாளோ எடுக்கலாம். இஸ்லாமியப் பொருளியல் அறிஞர்களின் ஆய்வின்படி, நாம் பணத்தை வங்கியில் செலுத்தி, எம்மால் முடிந்த மிக வேகமான வழிமுறையை (As fast as possible) பயன்படுத்தி பரிமாற்றத்தைத் தொடங்கிவிட்டால், அது "உடனடிப் பரிமாற்றம்" (On the spot) என்ற சட்டத்திற்குள் வந்துவிடும். தொழில்நுட்பக் காரணங்களுக்காக அது சென்றடையத் தாமதமாவது வட்டியாகக் கருதப்படாது.