வியாபாரத்தைப் பொறுத்தவரை, முதலீடு செய்த அசல் தொகை மற்றும் கைவசம் எஞ்சியிருக்கும் லாபம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்தே ஸகாத் கொடுக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, இரண்டு லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருந்தால், அந்த 12 லட்சம் ரூபாயும் ஒரு வருட காலம் உங்கள் கைவசம் தங்கியிருந்தால் முழுத் தொகைக்கும் ஸகாத் வழங்க வேண்டும். வந்து செலவாகிப் போன லாபங்களுக்கு ஸகாத் கிடையாது.
வியாபாரத்தில் பிறர் உங்களுக்குத் தர வேண்டிய கடன்களுக்கு (Receivables), அந்தப் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் வரை நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. என்றைக்கு அது உங்கள் கைக்கு வருகிறதோ, அன்றுதான் அதற்கு ஸகாத் கடமையாகும். அதேவேளை, நீங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் (Payables) ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகக் கொடுக்கப் போகிறீர்கள் என்றால் அந்தத் தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு ஸகாத் கொடுக்கலாம். உடனடியாகக் கொடுக்கப் போவதில்லை என்றால், உங்கள் வசமுள்ள முழுமையான அசல் மற்றும் லாபத் தொகைக்குச் சேர்த்தே ஸகாத் கொடுக்க வேண்டும்.