மார்க்கத்தில் நன்மைகளைச் செய்வதற்கும், பாவங்களிலிருந்து தவிர்ந்திருப்பதற்கும் தனித்தனி கணக்குகள் உள்ளன. ஒரு மனிதர் வட்டி போன்ற பெரும் பாவங்களில் ஈடுபட்டாலும், அவர் ஹலாலான தனது சொந்தப் பணத்தில் குர்பானி கொடுத்தால், அந்த குர்பானி சட்டரீதியாக நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
"அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையானதை (ஹலாலானதை)த் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என்ற ஹதீஸின் அடிப்படையில், அந்த குர்பானி ஹலாலான பணத்தில் வழங்கப்படுவதால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும். அவர் செய்கின்ற வட்டித் தொழிலுக்கான பாவம் என்பது வேறு; அதற்கான தண்டனை மறுமையில் அவருக்கு இருக்கும். ஒரு பாவம் செய்கிறார் என்பதற்காக அவர் செய்யும் மற்ற நன்மைகள் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும் என்று மார்க்கத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.
எனினும், இத்தகைய பெரும் பாவங்கள் அவர் செய்யும் நன்மையின் முழுமையான சிறப்பையும் கூலியையும் குறைத்துவிடக் கூடும். பாவத்தோடு செய்யும் நன்மைகள் காலப்போக்கில் நன்மை செய்யும் உணர்வையே மழுங்கடித்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே, இதை அஞ்சி அவர் அந்த வட்டிப் பாவத்திலிருந்து முழுமையாகத் தவ்பா செய்து மீள வேண்டும். மற்றபடி, ஹலாலான பணத்தில் அவர் கொடுக்கும் குர்பானி மார்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.