இஸ்லாமிய அடிப்படையில், திருமணத்தின் போது பெண்ணுக்கு எவ்விதப் பொருளாதாரச் செலவும் இல்லை. மஹர், தங்குமிடம், வலீமா விருந்து என அனைத்தையும் ஆண்பக்கமே பொறுப்பேற்க வேண்டும். எனவே, ஆடம்பரமான திருமணங்களை நடத்துவதற்கோ, பெண்ணுக்குச் சீதனம் அல்லது நகை வழங்குவதற்கோ, வீடு கட்டிக் கொடுப்பதற்கோ ஸகாத் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது.
எனினும், இன்றைய சமுதாய நடைமுறைகளைக் கருத்தில் கொள்ளும் போது, வறுமையில் உள்ள ஒரு பெண்ணுக்குத் திருமணத்திற்காக அத்தியாவசியமாக ஒருசில ஆடைகள் வாங்க வேண்டியிருக்கலாம். அல்லது, திருமணம் என்று வரும் போது உறவினர்களுக்கு அடிப்படை உணவளிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் இருக்கலாம். இத்தகைய மிக அத்தியாவசியமான, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எவ்வித வசதியும் இல்லாத பட்சத்தில், அந்த அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வறுமையிலுள்ள அந்தப் பெண்ணுக்கு ஸகாத் பணத்தை வழங்குவதில் மார்க்க ரீதியாகத் தவறில்லை. ஆடம்பரங்களுக்காகவோ, சீதனத்திற்கோ ஸகாத் பணத்தை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.