நீங்கள் ஒரு வீட்டைப் பணம் கொடுத்து வாங்குவதாக வியாபார ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் உங்களால் அந்தப் பணத்தைக் கட்ட முடியவில்லை என்றால், "என்னால் இந்த வீட்டை வாங்க முடியவில்லை" என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டு உங்கள் சொந்த ஊருக்குப் போவதாக முடிவெடுப்பது எந்த வகையிலும் நம்பிக்கை துரோகம் ஆகாது. நீங்கள் அந்த வீட்டை வாங்கவில்லை, எனவே அதை நீங்கள் அனுபவிக்காததால் வாடகை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், 10 லட்சத்துக்குப் பேசிய வீட்டை, உங்களது கஷ்டத்தைப் பார்த்து மாமனார் உங்களிடம் உள்ள 8 லட்சத்துக்கே தருகிறேன் என்று மனமுவந்து உடன்பட்டால், அதை வாங்குவது மார்க்க ரீதியாக எந்தப் பிழையுமில்லை. ஒரு நண்பனுக்காகவோ, பழகியவர் என்பதற்காகவோ, பக்கத்து வீட்டுக்காரர் என்பதற்காகவோ எப்படி ஒரு வியாபாரத்தில் விலையைக் குறைக்கலாமோ, அதேபோல ''மருமகன்'' என்ற காரணத்துக்காகவும் மாமனார் விலையைக் குறைக்கலாம். மருமகனுக்குக் குறைக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை.
சீதனம் என்பது பலவந்தமாகப் பெண் வீட்டாரிடமிருந்து பிடுங்குவதாகும். இது ஒரு வியாபார ஒப்பந்தம்; இதில் மாமனார் மனமுவந்து விலையைக் குறைத்துத் தருவது சீதனத்தில் சேராது; இது முற்றிலும் ஹலாலானதேயாகும்.