உங்களைப் பற்றிப் புறம் பேசியவரை மன்னித்து விடுவதுதான் மிகவும் சிறந்ததும் உயர்ந்ததுமான செயலாகும். ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால், மறுமையில் அநீதி இழைத்தவருடைய நன்மைகள் அநீதி இழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படும்; அவரிடம் நன்மை இல்லையென்றால் இவருடைய பாவங்கள் அவர் மீது சுமத்தப்படும்.
இது உண்மை என்றாலும், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்ட போது, அந்த அவதூறை நம்பிப் பரப்பிய மிஸ்தஹ் (ரழி) அவர்களுக்கு வழங்கி வந்த தர்மத்தை இனி வழங்க மாட்டேன் என அபூபக்கர் (ரழி) சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ், "உங்களில் சிறப்புடையவர்கள் மன்னிக்கட்டும், அவர்கள் விட்டுக்கொடுக்கட்டும்; அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா?" என்று குர்ஆன் வசனத்தை இறக்கினான்.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், ஒருவரை மன்னிப்பதன் ஊடாக நாம் இரண்டு பெரும் பாக்கியங்களைப் பெறுகிறோம். ஒன்று, நாம் ஒருவரை மன்னிப்பதால் அல்லாஹ் நமது அநேக பாவங்களை மன்னித்து நமக்கு மாபெரும் கூலியை வழங்குகிறான்; இரண்டாவது, அநீதி இழைத்தவரும் மன்னிக்கப்பட்டு இருவருமே சொர்க்கம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. நாம் மன்னிக்காமல் விட்டால் நமது பாவங்கள் அவர் மீது சுமத்தப்படும் என்பது ஒரு பிளஸ் ஆக இருந்தாலும், அவரை இவ்வுலகிலேயே மன்னித்துவிடுவதன் மூலம் அல்லாஹ்வுடைய மாபெரும் மன்னிப்பைப் பெறுவதுதான் மிகவும் சிறந்ததாகும்.