வாழ்நாள் முழுதும் நோன்பு நோற்க முடியாத நிரந்தர நோயாளிகள் அல்லது முதியவர்கள், விடுபட்ட நோன்புகளுக்காக ஃபித்யா (பரிகாரம்) கொடுக்க வேண்டும். அதேவேளை, நம்மால் நோன்பு பிடிக்க முடியவில்லையே என்ற உண்மையான கவலையோடு இருக்கக் கூடியவர்கள், ரமழானில் ஏனைய நற்காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நோன்பின் முழுமையான பலனையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அவர்கள் பகலில் நோன்பு நோற்கவில்லை என்பதற்காக, இரவில் தொழாமல் இருக்க வேண்டியதில்லை. இரவில் நின்று வணங்குதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல், லைலத்துல் கத்ரை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் தான தர்மங்களில் ஈடுபடுதல் போன்ற நல்லறங்களைச் செய்ய வேண்டும். அவர்கள் நோன்பு நோற்காதது அவர்களுடைய இயலாமையினால் ஏற்பட்டதே தவிர அவர்கள் வேண்டும் என்றே விட்டதல்ல. எனவே, இக்லாஸோடு (உளத்தூய்மையோடு) அவர்கள் செய்யும் ஏனைய அமல்களுக்கு இறைவன் ரமழானின் நோன்பின் முழுமையான சிறப்பை நிச்சயமாக வழங்குவான்.