ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

காது குத்துவது கூடாது என்ற கருத்தில் முன் சென்ற மார்க்க அறிஞர்கள் அல்லது சஹாபாக்கள் யாராவது சொல்லியுள்ளார்களா?

பெண்கள்

← முந்தையஅடுதது →
கேள்வி
காது குத்துவது கூடாது என்ற கருத்தில் முன் சென்ற மார்க்க அறிஞர்கள் அல்லது சஹாபாக்கள் யாராவது சொல்லியுள்ளார்களா?
பதில்
பதில்:

பெண்கள் காது குத்துவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டது, அது கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு. இதற்கு காரணம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கக்கூடிய செய்தி: "அழகுக்காக வேண்டி தங்கள் உடல்களிலே மாற்றம் செய்யக்கூடிய பெண்களை அல்லாஹுத்தஆலா சபிப்பானாக" என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். புருவம் மழிப்பவர்கள், பற்களுக்கிடையில் இடைவெளி விடுபவர்கள், பச்சை குத்துபவர்கள், ஒட்டுமுடி வைப்பவர்கள் என்று அழகுக்காக மாற்றங்கள் செய்யும் பெண்கள் சபிக்கப்பட்டதை அந்த ஹதீஸில் பார்க்கிறோம். ஒட்டுமுடி வைப்பதே அழகுக்காக உடலில் செய்யப்படும் மாற்றம் என்றால், காது குத்துவதும் அழகுக்காக உடலில் செய்யப்படும் ஒரு மாற்றம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

முன்சென்ற அறிஞர்களின் பேச்சுக்கள் இதில் உள்ளதா என்று கேட்டால், இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்குக் கொடுக்கும் விளக்கத்தை உங்களுக்கு ஒரு ஆறுதலுக்காக முன்வைக்கிறேன். அவர்கள் ஃபத்ஹுல் பாரியிலே பெருநாள் தினத்தில் பெண்கள் காதுகளில் இருந்த அணிகலன்களை கழற்றித் தர்மம் செய்தார்கள் என்ற ஹதீஸுக்கு விளக்கம் சொல்லும்போது இதை விவாதிக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: "பெண்கள் காதில் துளையிட்டு நகை போடலாம் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அந்த வாதத்தில் ஒரு சந்தேகம் உண்டு. காதில் துளையிட்டுத்தான் நகை போட வேண்டும் என்ற அவசியமில்லை; காதில் அப்படியே மாட்ட முடிந்த (அல்லது தலையிலிருந்து இறக்கி மாட்டக்கூடிய) நகைகளும் உண்டு. எனவே, அவர்கள் துளையிட்டுத்தான் அந்த நகைகளைப் போட்டிருந்தார்கள் என்ற வாதத்தில் கேள்விகள் உண்டு."

மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: "சரி, அப்படியே அவர்கள் துளையிட்டுத்தான் நகை போட்டிருந்தார்கள் என்று ஏற்றுக்கொண்டாலும், அது இஸ்லாம் வருவதற்கு முன்னால் (ஜாஹிலிய்யா காலத்தில்) துளையிட்டிருக்கலாம். ஆரம்பத்தில் செய்யப்பட்ட ஒன்றை மாற்ற முடியாத சூழ்நிலையில் இஸ்லாம் அங்கீகரித்திருக்கலாமே தவிர, புதிதாகத் துளையிடுவதை இஸ்லாம் கண்டிக்கவே செய்கிறது. உதாரணமாக, பொம்மை செய்யலாமா என்று கேட்டால் செய்யக் கூடாது; ஆனால் ஏற்கனவே செய்யப்பட்ட பொம்மையை சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தலாம். அதைப்போலவே இந்த காது துளையிடுதலையும் நாம் கருதிக்கொள்ளலாம்."

அதேபோல இமாம் இப்னுல் கய்யிம் அல்-ஜவ்சிய்யா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: "பெரும்பாலானவர்கள் சிறுவர் (ஆண் பிள்ளையாக) இருந்தால் காது துளையிடப்படுவதைத் தடுக்கிறார்கள், ஒரு சிலர் பெண் பிள்ளைகளுக்குத் துளையிடலாம் என்கிறார்கள்." இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களுடைய நிலைப்பாடும் சிறுவர்களுக்குக் கூடாது, பெண்களுக்கு அனுமதி என்பதாக வந்திருக்கிறது. ஆனால், இமாம் கஸாலி (ரஹ்) அவர்கள் தனது இஹ்யா உலூமுத்தீன் நூலில் சொல்கிறார்கள்: "வளர்ந்த பெரிய பெண்ணுடைய காதைத் துளையிடுவது ஹராம். அதற்காகக் கூலி வாங்குவதும், கூலிக்கு ஒரு ஆளை வைத்து அந்தப் பெண்ணின் காதில் துளையிடுவதும் ஹராம்."

இதுபோல இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வழியாக தப்ரானியில் சிறுவர்களின் காதைத் துளையிடுவது சுன்னா என்று ஒரு பலவீனமான செய்தி வந்திருப்பதையும் இமாம் இப்னு ஹஜர் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வளவு வாதப் பிரதிவாதங்களை அவர் எடுத்து வைப்பதன் மூலமே இதிலே மார்க்க அறிஞர்களுக்கிடையில் எவ்வளவு கருத்து முரண்பாடு இருந்திருக்கிறது, தாராளமாக அனைவரும் உடன்பட்ட கருத்தாக இது இருக்கவில்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். எனவே, காது குத்துவது கூடாது என்று பல இஸ்லாமிய அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நாம் ஃபத்ஹுல் பாரியின் கமெண்டரியிலே பார்க்கலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →