திருமணம் என்பது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாகப் பொருந்திக் கொண்டு வாழ வேண்டிய ஓர் உறவாகும். இதனால்தான் திருமணத்திற்கு முன் மணமகன் மணமகளைப் பார்ப்பதையும், அவர்களைப் பற்றி நன்கு விசாரித்து அறிவதையும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு முறையாக விசாரித்துத் திருமணம் செய்யும்போதே பல சங்கடங்களையும், பிரச்சனைகளையும் எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ள முடியும்.
திருமணம் நிறைவடைந்த பிறகு மனைவியிடத்தில் ஏதேனும் பெருங்குறைகள் இருப்பது கணவனுக்குத் தெரியவந்தால், அக்குறை அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதற்குத் தடையாக இருக்குமானால், அந்தப் பெண்ணைத் தலாக் சொல்லும் உரிமை கணவனுக்கு மார்க்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடித்த பின்புதான் மனைவி ஒரு மனநோயாளி என்பதை நீங்கள் அறிந்திருந்தால், முதலில் அவளுக்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். அவ்வாறு குணப்படுத்தி வாழ முற்பட்டால், அவளைக் குணப்படுத்திய நன்மையும், அவளோடு சேர்ந்து வாழ்ந்த நன்மையும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், குணப்படுத்தவே முடியாது என்று நீங்கள் கருதினால், அவளை விவாகரத்து (தலாக்) செய்யும் முழு உரிமை உங்களுக்கு உள்ளது; அவ்வாறு தலாக் சொல்வதால் நீங்கள் மார்க்கத்தில் பாவியாக மாட்டீர்கள்.