ஐங்காலத் தொழுகைகளுக்கு முன்னரும் பின்னருமாக 12 ரக்அத்துகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் (சுன்னத் முஅக்கதா). இந்த 12 ரக்அத்துகளை யார் பேணித் தொழுகிறாரோ அவருக்குச் சுவர்க்கத்திலே ஒரு வீடு கட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறியுள்ளார்கள். ஃபஜ்ருக்கு முன் இரண்டு, ளுஹருக்கு முன் நான்கு, பின் இரண்டு, மஃரிபுக்கு பின் இரண்டு, இஷாவுக்கு பின் இரண்டு என அந்த 12 ரக்அத்துகள் அமைகின்றன. இதில் மஃரிபுக்கு முன் உள்ள சுன்னத் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில், நபிலான (உபரியான) வணக்கங்களை அதிகமாகச் செய்கிறபோது அல்லாஹ்வுடைய நெருக்கமும் நேசமும் கிடைக்கும் என்பதை ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஒவ்வொரு அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத் தொழுகை உள்ளது" என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில், ஒருவர் மஃரிப் தொழுகைக்கு முன் (பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்) இரண்டு ரக்அத் சுன்னத் தொழ விரும்பினால் மார்க்கத்தில் அதற்கு முழுமையான அனுமதி இருக்கிறது. அவ்வாறு தொழுதால் நிச்சயமாக அவருக்கு அல்லாஹ்வுடைய அன்பும் நெருக்கமும் கிடைக்கும்.