உழ்ஹிய்யாவைப் பொறுத்தவரையில், அதனை நிறைவேற்றுபவர் தனது சொந்தக் கரங்களால் அறுப்பதும், அதிலிருந்து அவர் சாப்பிடுவதும் சுன்னத்தாகும். எனவே, அவரவர் வாழும் ஊர்களிலேயே உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதுதான் மிகவும் சிறந்ததாகும். தனக்கு அறுக்கத் தெரியாவிட்டால் அருகில் இருந்து வேறொருவரை அறுக்கச் செய்யலாம்.
வெளியூர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ உழ்ஹிய்யாவை அனுப்பி வைப்பது குறித்து இமாம்களிடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் கஸர் தொழுகைக்குரிய தூரம் வரை மட்டுமே அனுப்பலாம் என்றும், சிலர் அனுப்பவே கூடாது என்றும் கூறுகின்றனர். எனினும், நவீன கால இஸ்லாமிய அறிஞர்கள், உழ்ஹிய்யாவை வேறு நாடுகளுக்கு அனுப்புவதில் மிகப்பெரிய நன்மைகளும் நலன்களும் (மஸ்லஹா) இருக்குமாக இருந்தால் அவ்வாறு அனுப்பி வைப்பதில் எவ்விதத் தடையுமில்லை என்று மார்க்கத் தீர்ப்பளித்துள்ளனர். உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஒருவர் அங்கு உழ்ஹிய்யா கொடுக்க முடியாத சூழல் இருந்தாலோ, அல்லது இறைச்சியை விநியோகிக்க தகுதியான ஏழைகள் அங்கே இல்லாவிட்டாலோ, அவர் தனது உழ்ஹிய்யாவை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை.