குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அகீகா கொடுப்பது (ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும்) வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஏழாவது நாள் அகீகா கொடுக்கத் தவறினால், 14வது அல்லது 21வது நாட்களில் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் வந்தாலும், அவை பலவீனமானவை (லஈஃப்) ஆகும்.
ஏழாவது நாள் அகீகா கொடுக்கத் தவறியவர் பின்னர் எப்போது அதனைக் கொடுக்கலாம் என்பது குறித்து அறிஞர்களிடையே சிறு கருத்து வேறுபாடு உள்ளது. இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள், ஏழாவது நாள் கொடுக்கத் தவறினால் அதன்பின்னர் அகீகா கொடுக்க முடியாது என்று கருதுகிறார்கள். ஆனால், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள், ஏழாவது நாள் கொடுக்கத் தவறியவர் பின்னர் தமக்கு வசதிப்படுகிற எந்த நாளிலும் அகீகா கொடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். முற்கால அறிஞர்கள் (சலபுகள்) சிலரும் இவ்வாறே வழிகாட்டியுள்ளனர். இதுவே வலுவான கருத்தாகும்.
ஆயினும், ஏழாவது நாளிலேயே அகீகாவை நிறைவேற்றுவதுதான் சுன்னாவைப் பூரணப்படுத்தும் சிறந்த செயலாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.