பொதுவாக அல்குர்ஆனை ஓதுவது நமக்கு வலியுறுத்தப்பட்ட ஒரு இபாதத் ஆகும். அல்குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும். சில சூராக்களை நபி (ஸல்) அவர்கள் அடையாளப்படுத்தி அவற்றின் சிறப்புகளைக் கூறியுள்ளார்கள். (உ-ம்: சூரத்துல் இஹ்லாஸ் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி, ஆயத்துல் குர்ஸியை ஓதினால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு கிடைக்கும்).
\nஆனால், சூரா யாஸீனுடைய சிறப்பு பற்றி சில ஹதீஸ்கள் வருகின்றன: "குர்ஆனுடைய இதயம் யாஸீன்", "சூரா யாஸீனை ஓதினால் அல்குர்ஆனை பத்து தடவை ஓதிய நன்மை", "இரவில் ஓதினால் பாவங்கள் மன்னிக்கப்படும்", "ஒவ்வொரு இரவும் ஓதி மரணித்தால் ஷஹீத் ஆகுவார்", "மையவாடிகளுக்கு சென்று ஓதினால் வேதனை குறைக்கப்படும்" என்று பல செய்திகள் உள்ளன. இவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவோ அல்லது கடுமையான பலவீனமான செய்திகளாகவோ இருக்கின்றன.
\nஇமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) தன்னுடைய ''அல்மௌளூஆத்'' என்கிற புத்தகத்திலும், இமாம் ஷவ்கானி (ரஹ்) ''அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ'' என்கிற நூலிலும் இது பற்றி விரிவாகப் பேசி, சூரா யாஸீனுடைய சிறப்பு தொடர்பாக வரக்கூடிய செய்திகள் எல்லாம் பலவீனமானவை என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, சூரா யாஸீனுக்கு என்று எந்தவொரு பிரத்தியேகமான சிறப்பும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸ்களிலும் வரவில்லை. அதனை அல்லாஹ்வுடைய கலாம், குர்ஆனிலே உள்ள ஒரு சூரா என்ற அடிப்படையில் நாம் அதிகமதிகம் ஓத வேண்டும். ஆனால் ஒவ்வொரு இரவும் ஓதினால் இன்ன பலன் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையில் அதை ஓதுவது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒன்றாகும்.