المعارج
ஸூரா 70 — அல்மஆரிஜ்
44 வசனங்கள் · ஜுஎ் 29
1
سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி கேட்பவன் ஒருவன் (உம்மிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கிறான்.
IFT
கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிகழக் கூடிய வேதனைபற்றிக் கேட்கக் கூடியவன் (எப்பொழுது வருமென பரிகசிக்கும் நோக்குடன்) கேட்கின்றான்.
2
لِّلْكٰفِرِیْنَ لَیْسَ لَهٗ دَافِعٌ ۟ۙ
முஹம்மது ஜான்
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை.
IFT
நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போருக்கு–(அது நிகழும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவர் எவருமில்லை.
3
مِّنَ اللّٰهِ ذِی الْمَعَارِجِ ۟ؕ
முஹம்மது ஜான்
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
அப்துல் ஹமீது பாகவி
உயர்ப் பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).
IFT
ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயர் வழிகளுடைய அல்லாஹ்விடமிருந்து (அது சம்பவிக்கும்)
4
تَعْرُجُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِیْنَ اَلْفَ سَنَةٍ ۟ۚ
முஹம்மது ஜான்
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வானவர்களும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
IFT
வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மலக்குகளும் ஜிப்ரீலும் (அல்லாஹ்வாகிய) அவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள், அதன் அளவு ஐம்பதினாயிரம் வருடங்களாகும்.
5
فَاصْبِرْ صَبْرًا جَمِیْلًا ۟
முஹம்மது ஜான்
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருப்பீராக!
IFT
(நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அழகான பொறுமையாகப் பொறுத்திருப்பீராக!
6
اِنَّهُمْ یَرَوْنَهٗ بَعِیْدًا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.
IFT
இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நிச்சயமாக அவர்கள் (நிகழக்கூடிய) அதனை வெகுதூரமாகக் காண்கின்றனர்.
7
وَّنَرٰىهُ قَرِیْبًا ۟ؕ
முஹம்மது ஜான்
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமோ அதை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
IFT
நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாமோ, அதனை மிகச் சமீபமானதாகக் காண்கின்றோம்.
8
یَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِ ۟ۙ
முஹம்மது ஜான்
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
IFT
(அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானம், பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகும் நாளில்-
9
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
அப்துல் ஹமீது பாகவி
மலைகள் பஞ்சைப் போல் ஆகி (பறந்து) விடும்.
IFT
மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மலைகள் சாயம் ஏற்றப்பட்ட பஞ்சைப் போன்று ஆகும் (நாளில் அது நிகழும்).
10
وَلَا یَسْـَٔلُ حَمِیْمٌ حَمِیْمًا ۟ۚۖ
முஹம்மது ஜான்
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்த போதிலும் அவனுடைய சுகத்தை) விசாரிக்க மாட்டான்.
IFT
மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப்பற்றி விசாரித்து)க்கேட்கமாட்டான்.
11
یُّبَصَّرُوْنَهُمْ ؕ یَوَدُّ الْمُجْرِمُ لَوْ یَفْتَدِیْ مِنْ عَذَابِ یَوْمِىِٕذٍ بِبَنِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்வார்கள். குற்றவாளி, அந்நாளில் தன் வேதனைக்குப் பரிகாரமாகத் தன் பிள்ளைகளையும்,
IFT
ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர், (எனினும் ஒருவர் மற்றவரைப்பற்றி கேட்டுக் கொள்ளமாட்டார்; ஒருவரை ஒருவர் அறியாதவர் போன்று வெருண்டோடுவா்.) அந்நாளுடைய வேதனையிலிருந்து (தன்னைக் காப்பாற்றிக்கொள்ள) குற்றவாளி தன்னுடைய மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான்.
12
وَصَاحِبَتِهٖ وَاَخِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
அப்துல் ஹமீது பாகவி
தன் மனைவிகளையும், தன் சகோதரனையும்,
IFT
தன் மனைவியையும், சகோதரனையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் மனைவியையும், தன் சகோதரனையும்,
13
وَفَصِیْلَتِهِ الَّتِیْ تُـْٔوِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
அப்துல் ஹமீது பாகவி
தன்னை ஆதரித்து வந்த தன் சொந்தக்காரர்களையும்,
IFT
தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னை அரவணைத்து வந்த தன் உறவினர்களையும்-
14
وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ ثُمَّ یُنْجِیْهِ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரியப்படுவான்.
IFT
ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் (ஈடாகக் கொடுத்துப்) பின்னர் அது அவனைக் காப்பாற்றிக் கொள்ளும் (என்று விரும்புவான்).
15
كَلَّا ؕ اِنَّهَا لَظٰی ۟ۙ
முஹம்மது ஜான்
அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.)
IFT
ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால் அது நடைபெறுவது) அல்ல, (ஏனெனில்) நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நரகத்தின்) நெருப்பாகும்.
16
نَزَّاعَةً لِّلشَّوٰی ۟ۚۖ
முஹம்மது ஜான்
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
அப்துல் ஹமீது பாகவி
அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும்.
IFT
அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது தலையின் தோலை (எரித்து) கழற்றி விடக்கூடியதாகும்.
17
تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰی ۟ۙ
முஹம்மது ஜான்
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும்.
IFT
எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
புறமுதுகிட்டுச் சென்று புறக்கணித்தோரையும் அது அழைக்கும்.
18
وَجَمَعَ فَاَوْعٰی ۟
முஹம்மது ஜான்
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
அப்துல் ஹமீது பாகவி
(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்).
IFT
மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பொருளைச்) சேமித்து (அதனைச் செலவு செய்யாது) பாதுகாத்து வந்தோரையும் (தன்னிடம் அழைக்கும்)
19
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
IFT
மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப்பட்டுள்ளான்.
20
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۟ۙ
முஹம்மது ஜான்
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான்.
IFT
ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால்) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் (திடுக்கிட்டுப்) பதறுகிறவனாக-
21
وَّاِذَا مَسَّهُ الْخَیْرُ مَنُوْعًا ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான்.
IFT
ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள்கிறவனாக (இருக்கிறான்).
22
اِلَّا الْمُصَلِّیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
தொழுகையாளிகளைத் தவிர-
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர.
IFT
ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தொழுகையாளிகளைத் தவிர,
23
الَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ دَآىِٕمُوْنَ ۟
முஹம்மது ஜான்
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.
IFT
அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் (ஐவேளைத்) தொழுகையின மீது நிரந்தரமானவர்கள். (தவறாது தொழுபவர்கள்)
24
وَالَّذِیْنَ فِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ ۟
முஹம்மது ஜான்
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு.
IFT
அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு-
25
لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
முஹம்மது ஜான்
யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்).
IFT
யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாசித்துக்) கேட்பவருக்கும், (வெட்கித்துக்) கேட்காதவருக்கும் (உண்டு).
26
وَالَّذِیْنَ یُصَدِّقُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟
முஹம்மது ஜான்
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மை என்றே நம்புகின்றனர்.
IFT
அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கும் (மறுமை) நாளை உண்மைப்படுத்துகின்றனர்.
27
وَالَّذِیْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.
IFT
மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையேரென்றால், தங்கள் இரட்சகனின் வேதனையை அவர்கள் பயந்தோராவர்.
28
اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَیْرُ مَاْمُوْنٍ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல.
IFT
ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால்,) நிச்சயமாக தங்களிரட்சகனின் வேதனை அச்சப்படாது இருக்கக்கூடியதன்று (என்பதை அவர்கள் நன்கறிவார்கள்)
29
وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.
IFT
அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் வெட்கத்தலங்கைளப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
30
اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
IFT
அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் தவிர அப்போது நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களல்லர்.
31
فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதைத்தவிர (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள்.
IFT
ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவராவது இதற்கப்பால் (தவறான வழியில் அனுபவிக்கத்) தேடினால் அத்தகையோர்-அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவர்.
32
وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கிறார்களோ அவர்களும்,
IFT
அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதியையும் பேணிக் கொள்கின்றவர்கள்.
33
وَالَّذِیْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآىِٕمُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், எவர்கள், தங்கள் சாட்சியத்தில் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கிறார்களோ அவர்களும்,
IFT
மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.
34
وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகிறார்களோ அவர்களும்,
IFT
மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின்மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய முறைகளைப் பேணிப்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
35
اُولٰٓىِٕكَ فِیْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۟ؕ۠
முஹம்மது ஜான்
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகிய இவர்கள்தான் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
IFT
இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய) அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப் படுவார்கள்.
36
فَمَالِ الَّذِیْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்திரம்? (அவர்கள்) உமக்கு முன் ஓடி வருகின்றனர்!
IFT
(நபியே) என்ன விஷயம்? இந்நிராகரிப்பாளர்கள் உம்மை நோக்கி ஓடிவருகின்றார்களே,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? (அவர்கள்) உம்மைச் சுற்றி ஓடி வருகின்றனர்!.
37
عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ عِزِیْنَ ۟
முஹம்மது ஜான்
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
அப்துல் ஹமீது பாகவி
வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).
IFT
வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டங்கூட்டமாக (ஓடி வருகின்றனர்.)
38
اَیَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّدْخَلَ جَنَّةَ نَعِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாமென்று ஆசைப்படுகின்றனரா?
IFT
இவர்கள் ஒவ்வொருவரும் அருள்நிறைந்த சுவனத்தில் தாம் நுழைவிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் அருட்கொடையுடைய சுவனத்தில் பிரவேசிக்கப்படுவதை ஆசிக்கின்றானா?
39
كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا یَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஆகப்போவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களைப் படைத்திருக்கிறோம்.
IFT
ஒருபோதும் நடக்காது! நாம் எப்பொருளிலிருந்து அவர்களைப் படைத்தோமோ அதை அவர்களே அறிந்திருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது ஒருபோதுமில்லை! நிச்சயமாக நாம், அவர்கள் அறிந்திருப்பதிலிருந்தே அவர்களைப் படைத்திருக்கின்றோம்.
40
فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
அப்துல் ஹமீது பாகவி
கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நம் விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்!
IFT
அவ்வாறில்லை. நான் சத்தியம் செய்கின்றேன். கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதியின் மீது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கிழக்குத் திசைகள், இன்னும், மேற்குத் திசைகளின் இரட்சகன் மீது நான் சத்தியம் செய்கிறேன்; நிச்சயமாக நாம் (நம் இஷ்டப்படிச் செய்ய) ஆற்றலுடையோர், (அதாவது:)
41
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ خَیْرًا مِّنْهُمْ ۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟
முஹம்மது ஜான்
(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்); ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களல்ல.
IFT
இவர்களுக்குப் பகரமாக இவர்களைவிட சிறந்தவர்களைக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். மேலும் நம்மை வெற்றி கொள்ளக்கூடியவர் எவரும் இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களைவிட, மிகச் சிறந்தவர்களை (அவர்களுக்குப் பகரமாக) மாற்றி விடுவதின் மீது (ஆற்றலுடையோராவோம்! இதில்) நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லர்.
42
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
IFT
எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண் காரியங்களில் மூழ்கியும் விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!
43
یَوْمَ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰی نُصُبٍ یُّوْفِضُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுக்கு ஒரு நாளை நீர் ஞாபகமூட்டுவீராக. (சிலை வணங்குபவர்கள் தங்கள் திருநாள்களில் பூஜைக்காக நட்டுவைக்கப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள்.
IFT
இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணைவைப்போர்) நடப்பட்டவைக(ளான சிலைக)ளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறி வரும்நாள்,
44
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْیَوْمُ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும்; இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும்; அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
IFT
இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய பார்வை கீழ்நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும், (நபியே!) அது அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.