الحشر
ஸூரா 59 — அல்ஹஷ்ர்
24 வசனங்கள் · ஜுஎ் 28
1
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
முஹம்மது ஜான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வையே துதி செய்து கொண்டிருக்கிறது. மேலும், அவனே யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன, அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
2
هُوَ الَّذِیْۤ اَخْرَجَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِیَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ ؔؕ مَا ظَنَنْتُمْ اَنْ یَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَیْثُ لَمْ یَحْتَسِبُوْاۗ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ یُخْرِبُوْنَ بُیُوْتَهُمْ بِاَیْدِیْهِمْ وَاَیْدِی الْمُؤْمِنِیْنَ ۗ فَاعْتَبِرُوْا یٰۤاُولِی الْاَبْصَارِ ۟
முஹம்மது ஜான்
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தை உடையவர்களில் எவர்கள் நிராகரிப்பவர்களாக ஆனார்களோ அவர்களை, அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளிப்படுத்தியவன் அவன்தான். (அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளில்) இது முதலாவதாகும். அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளிப்பட்டு விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தங்கள் கோட்டைக் கொத்தளங்கள், அல்லாஹ்வை விட்டுத் தங்களை தடுத்துக் கொள்ளுமென்று மெய்யாகவே எண்ணிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்து, அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டு, அவர்கள் தங்கள் கையைக் கொண்டே தங்கள் வீடுகளை அழிக்குமாறு செய்ததுடன், நம்பிக்கையாளர்களுடைய கைகளைக் கொண்டும் அவர்களுடைய வீடுகளை அழித்தான். (அகப்)பார்வையுடையவர்களே! (இதைக் கொண்டு) நீங்கள் அறிவுணர்ச்சி பெறுவீர்களாக!
IFT
அவனே வேதம் வழங்கப்பட்டவர்களில் நிராகரிப்பாளர்களாய் இருந்தவர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதல் படையெடுப்பிலேயே வெளியேற்றினான். அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தங்களின் கோட்டைகள், அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றிவிடும் என்று அவர்களும் கருதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திராத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்கள் மீது வந்தான். அவன் அவர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விட்டான். (பிறகு ஏற்பட்ட விளைவு இதுவே:) அவர்கள் தங்களுடைய கைகளைக் கொண்டே தங்களின் இல்லங்களை அழித்துக் கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் கைகளைக் கொண்டும் அழிவினை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, பார்க்கும் கண்கள் உடையீர் படிப்பினை பெறுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், வேதத்தையுடையோரில் நிராகரித்தார்களே அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து (மதீனாவிலிருந்து ஷாம் தேசத்தின் பால்) முதல் வெளியேற்றதிற்காகவேண்டி வெளியேற்றினான், அவர்கள் (தங்கள் வீடுகளிலிருந்து) வெளியேறிவிடுவார்களென்று நீங்கள் எண்ணவில்லை, மேலும், அவர்கள் தங்களுடைய கோட்டைகள், அல்லாஹ்வை விட்டுத் தங்களைத் தடுத்துகொள்பவை என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்கள் எண்ணிப்பார்த்திராதவிதத்தில் அல்லாஹ் அவர்களிடம் (தனது வேதனையைக்கொண்டு) வந்துவிட்டான், மேலும், அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப்போட்டான், (அதனால்) அவர்கள் தம் கரங்களாலும், விசுவாசிகளின் கரங்களாலும் தம் வீடுகளைப் பாழ்படுத்திக் கொண்டனர், பார்வை (விளக்கங்)கள் உடையோரே, (இதன்மூலம் உபதேசம் பெற்று) நீங்கள் படிப்பினை பெறுவீர்களாக!
3
وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَیْهِمُ الْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِی الدُّنْیَا ؕ وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ ۟
முஹம்மது ஜான்
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நாடு கடத்தல் (மட்டும்) செய்துவிடுமாறு அல்லாஹ் (ஏற்கனவே) விதித்திருக்காவிடில் இவ்வுலகத்திலேயே அவர்களை(க் கடினமான) வேதனை செய்திருப்பான். எனினும், மறுமையில் நரக வேதனை அவர்களுக்குக் காத்திருக்கிறது.
IFT
அல்லாஹ் அவர்கள் மீது நாடுகடத்தலை விதித்திராவிடில் உலகிலேயே அவர்களுக்கு வேதனை அளித்திருப்பான். மறுமையிலோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கவே செய்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் அவர்களின்மீது (அவர்கள் குடும்ப சகிதம் அவர்களுடைய ஊரிலிருந்து) வெளியேறுவதை விதித்திருக்காவிடில், இவ்வுலகத்திலேயே அவன் அவர்களை வேதனை செய்திருப்பான், அன்றியும் மறுமையில் அவர்களுக்கு (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
4
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
முஹம்மது ஜான்
அதற்கு(க் காரணம்): நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கிறானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான்.
IFT
இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்ததுதான். மேலும், அல்லாஹ்வை யார் எதிர்ப்பினும் திண்ணமாக, அல்லாஹ் (அவர்களுக்குத்) தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து (கொண்டு அவர்களை விரோதித்து) விட்டார்கள் என்பதினாலாகும், இன்னும் எவர் அல்லாஹ்விற்கு மாறுசெய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடினமானவன்.
5
مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவர்களுடைய பேரீச்சமரங்களை வெட்டியதும் அல்லது (வெட்டாது) வேருடன் (இருந்தவாறே) அதன் அடிகளின் மீது நின்றிருக்கும்படி நீங்கள் அவற்றை விட்டுவைத்ததும், அந்தப் பாவிகளை இழிவுபடுத்தும் பொருட்டு, அல்லாஹ்வின் அனுமதிபடியே (நடைபெற்ற காரியம் ஆகும்).
IFT
நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதும், அல்லது (வெட்டாது) அவைகளின் வேர்களின் மீது நிற்கக்கூடியதாக நீங்கள் அவைகளை விட்டு வைத்ததும் அல்லாஹ்வின் அனுமதி கொண்டும், அந்தப் பாவிகளை அவன் இழிவுபடுத்துவதற்காகவும்.
6
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَیْهِ مِنْ خَیْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ یُسَلِّطُ رُسُلَهٗ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடமிருந்து, அல்லாஹ் தன் தூதருக்கு (சிரமம் ஏதுமின்றி)க் கொடுத்த பொருள்களுக்காக (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் குதிரையின் மீதேறியோ, ஒட்டகத்தின் மீதேறியோ (போர் புரிந்து) சிரமப்படவில்லை. எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன் தூதர்களுக்கு ஆதிக்கத்தைக் கொடுப்பான். அல்லாஹ் சகலவற்றின் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்.
IFT
மேலும், அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்து, தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ அந்தச் செல்வம் உங்கள் குதிரைகளையும், ஒட்டகங்களையும் நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிட்டியதல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடுபவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களிடமிருந்து அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எதை மீட்டுக் கொடுத்தானோ அ(தைப்பெறுவ)தற்காக (விசுவாசிகளே!) நீங்கள் குதிரையையோ, ஒட்டகத்தையோ ஓட்டவில்லை, எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களின் மீது தன்னுடைய தூதர்களை ஆதிக்கம் செலுத்தச் செய்கிறான், மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
7
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰی فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ كَیْ لَا یَكُوْنَ دُوْلَةً بَیْنَ الْاَغْنِیَآءِ مِنْكُمْ ؕ وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ۗ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟ۘ
முஹம்மது ஜான்
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்.
IFT
ஊர்வாசிகளிடமிருந்து தன் தூதரின் பக்கம் அல்லாஹ் திருப்பியவை அனைத்தும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் சேரக்கூடியவை ஆகும். ஏனெனில் அது உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக! இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனை விட்டு விலகி இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் கடுந்தண்டனை அளிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வெற்றிகொள்ளப்படும் அனைத்து) ஊரார்களிடமிருந்து தன் தூதருக்கு அல்லாஹ் மீட்டுக் கொடுத்தானே அவை, (அவற்றில்) அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும், செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக, (இவ்வாறு பங்கீடு செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்) அன்றியும், (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிக்க கடினமானவன்.
8
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِیْنَ الَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاَمْوَالِهِمْ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّیَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர்.
IFT
(மேலும், அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்*களுக்கு உரியதுமாகும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் அவனது உவப்பையும் விரும்புகின்றார்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி புரிந்திடத் தயாராயிருக்கின்றார்கள். இவர்களே, வாய்மையுள்ள மக்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் வீடுகளையும், தங்கள் பொருட்களையும் விட்டு (அக்கிரமமாக மக்காவிலிருந்து) வெளியேற்றப்பட்டார்களே அத்தகைய ஹிஜ்ரத்துச் செய்தவர்களான ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பேரருளையும், (அவனுடய) பொருத்தத்தையும் தேடுகின்றனர், இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்கின்றனர், இவர்கள் தாம் (“ஸாதிகூன் என்னும்) உண்மையாளர்கள்.
9
وَالَّذِیْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَلَا یَجِدُوْنَ فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَیُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۫ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு நம்பிக்கையையும் ஏற்றுக் கொண்டார்களே அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத்துச் செய்து தங்களிடம் வருபவர்களை அன்பாக நேசித்து வருவதுடன், (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்)கொடுப்பதைப் பற்றித் தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
IFT
மேலும் (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்). ஹிஜ்ரத்* செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானதே என்று மனத்தளவில்கூட அவர்கள் நினைப்பதில்லை. மேலும், தாங்களே தேவையுள்ளவர்களாய் இருந்தாலும்கூட, தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை வழங்குகின்றார்கள். உண்மை யாதெனில், யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக்கூடியவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (முஹாஜிரீன்களாகிய) அவர்களுக்கு முன்பே (மதீனாவில்) வீட்டையும் (அல்லாஹ்வின் மீது) விசுவாசம்கொள்வதையும் கலப்பற்றதாக்கிக்) கொண்டிருந்தார்களே அத்தகைய (அன்ஸாரிகளான)வர்கள், தம்பால் “ஹிஜ்ரத்து”ச் செய்து வந்தோரை நேசிப்பார்கள், மேலும், (ஹிஜ்ரத்துச் செய்து வந்த) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தங்கள் நெஞ்சங்களில் காழ்ப்புணர்ச்சியைப் பெறமாட்டார்கள், மேலும், தங்களுக்கு (கடும்) தேவையிருந்த போதிலும், தங்களைவிட (முஹாஜிரீன்களான அவர்களை)த் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இன்னும் எவர் தன் உலோபத்தனத்திலிருந்து காக்கப்பட்டாரோ, அத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.
10
وَالَّذِیْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர்.
IFT
மேலும், இந்த முன்னோடிகளுக்குப் பிறகு வருகின்ற மக்களுக்கு (உரியதாகும் அந்தச் செல்வம்!) அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் அதிபதியே! எங்களையும் எங்களைவிட முந்தி நம்பிக்கை கொண்டு விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களின் பேரில் எந்தக் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் அதிபதியே! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள்.
11
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نَافَقُوْا یَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِیْعُ فِیْكُمْ اَحَدًا اَبَدًا ۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி ‘‘நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் கட்டுப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்'' என்று கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
IFT
நயவஞ்சகத்தனமான நடத்தையை மேற்கொண்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? இவர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களில் இறைநிராகரிப்பாளர்களாய் உள்ள தங்களின் சகோதரர்களிடம் கூறுகின்றார்கள்: “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விவகாரத்தில் நாங்கள் எவருடைய பேச்சையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உங்களின்மீது போர் தொடுக்கப்பட்டால் நாங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வோம்!” ஆனால், இவர்கள் சுத்தப்பொய்யர்கள் என்பதற்கு இறைவன் சாட்சியாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நயவஞ்சகர்களாக ஆகிவிட்டார்களே அவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வேதத்தையுடையோர்களில் உள்ள நிராகரித்து விட்டோரான தங்கள் சகோதரர்களிடம், “நீங்கள் (உங்கள் இல்லைத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறி விடுவோம், மேலும், உங்கள் விஷயத்தில், (உங்களுக்கு விரோதமான) நாங்கள் எவருக்கும் ஒரு காலத்திலும் கீழ்ப்படிய மாட்டோம், உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவியும் புரிவோம்” என்று கூறுகின்றனர், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சியங் கூறுகின்றான்.
12
لَىِٕنْ اُخْرِجُوْا لَا یَخْرُجُوْنَ مَعَهُمْ ۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا یَنْصُرُوْنَهُمْ ۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَیُوَلُّنَّ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள்.
IFT
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள். மேலும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால், இவர்கள் அவர்களுக்கு ஒருபோதும் உதவ மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யச் சென்றாலும்கூட புறமுதுகு காட்டிக் கொண்டு ஓடிவிடுவார்கள். பிறகு, எங்கிருந்தும் எந்த உதவியும் அவர்கள் பெறமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால்), அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேறிச் செல்லமாட்டார்கள், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டாலோ அவர்களுக்கு உதவிபுரியமாட்டார்கள், அவர்களுக்கு இவர்கள் உதவி செய்(ய முன்வந்)த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே அவர்கள் ஓடி விடுவார்கள். பின்னர், (எவராலுமே) அவர்கள் (எத்தகைய) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
13
لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِیْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கிறது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.
IFT
இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தைவிட, உங்களுடைய அச்சமே அதிகமாக உள்ளது. ஏனெனில், இவர்கள் ஒன்றும் புரியாத மக்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக நீங்கள் அவர்களுடைய நெஞ்சங்களில், பயத்தால் அல்லாஹ்வை(ப்பற்றிய பயத்தை) விட மிக்க அதிகமானவர்களாக இருக்கிறீர்கள், அது நிச்சயமாக அவர்கள் விளங்கிக் கொள்ளமுடியாத சமூகத்தினராக இருப்பதினாலேயாகும்.
14
لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக் குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர். (இல்லை) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக் கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதையும்) அறிந்துகொள்ள சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும்.
IFT
இவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு (திறந்த மைதானத்தில்) ஒருபோதும் உங்களுடன் போரிட மாட்டார்கள். போரிட்டாலும் அரண்களுடைய ஊர்களினுள் அமர்ந்து கொண்டோ, சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டோதான் போரிடுவார்கள். அவர்கள் தங்களுக்கிடையே மோதிக் கொள்வதில் கடுமையாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீர் கருதுகின்றீர். ஆனால், இவர்களுடைய இதயங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவர்கள் இந்நிலைக்கு ஆளானதன் காரணம், இவர்கள் சிந்திக்காத மக்களாய் இருப்பதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கோட்டைகளால்) அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலோ, அல்லது சுவர்களுக்கப்பாலோ அல்லாமல் அவர்கள் அனைவரும் (ஒருங்கிணைந்தவர்கள்களாக) உங்களுடன் யுத்தம் புரியமாட்டார்கள், அவர்களுக்கு மத்தியிலே அவர்களின் சண்டை கடினமாகயிருக்கும் அவர்களை ஒன்றுபட்டிருப்பதாக நீர் எண்ணுகின்றீர், (ஆனால்) அவர்களுடைய இதயங்களோ சிதறிக்கிடக்கின்றன, அ(தன் காரணமாவ)து நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களான சமூகத்தார் என்பதினாலாகும்.
15
كَمَثَلِ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَرِیْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்கள் கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
IFT
இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்பு தம் செயல்களின் தீயவிளைவை சுவைத்து விட்டிருந்த மக்களைப் போன்றுதான் இவர்களும் இருக்கின்றனர். மேலும், இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களுக்கு உதாரணமாவது) அவர்களுக்கு முன்னர் (காலத்தால்) சமீபத்தில் உள்ளோரின் உதாரணத்தைப் போன்றதாகும், அவர்கள் தங்களுடைய செயல்களுக்குரிய தீய பலனை (பத்ரூ யுத்தத்தில்) சுவைத்தார்கள், இன்னும் (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
16
كَمَثَلِ الشَّیْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
முஹம்மது ஜான்
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கிறது. அவன் மனிதனை நோக்கி ‘‘நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு'' என்று கூறுகிறான். அவ்வாறே அவனும் நிராகரித்து விட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படுகிறேன்'' என்று கூறுவான்.
IFT
இவர்கள் ஷைத்தானுக்கு ஒப்பாக இருக்கின்றார்கள். அவன் ‘நிராகரித்து விடு!’ என்று முதலில் மனிதனிடம் கூறுகின்றான். அதன்படி மனிதன் நிராகரித்துவிடுகிறபோது ஷைத்தான் கூறுகின்றான்: “நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். அகிலமனைத்திற்கும் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களுக்கு உதாரணம்) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றதாகும். அவன் மனிதனிடம், “நீ (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விடு” என்று கூறிய சமயத்தில்_(அதைக்கேட்டுப்) பின்னர், அவன் நிராகரித்து விட்டபொழுது (ஷைத்தான் அவனிடம்,) “நிச்சயமாக நான் உன்னை விட்டு நீங்கிக்கொண்டேன், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினான்.
17
فَكَانَ عَاقِبَتَهُمَاۤ اَنَّهُمَا فِی النَّارِ خَالِدَیْنِ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟۠
முஹம்மது ஜான்
அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகி விட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும்.
IFT
பிறகு, நிரந்தரமாக நரகத்தில் வீழ்ந்து கிடப்பதே இருவரின் கதியாகும். மேலும், கொடுமைக்காரர்களின் கூலி இதுவேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிச்சயமாக (ஷைத்தானும், நிராகரித்த மனிதனுமாகிய) அவ்விருவரும் நரகத்தில் அதில் அவ்விருவரும் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்பதே அவ்விருவருடைய முடிவாக ஆகிவிட்டது, மேலும், அது அநியாயக்காரர்களின் கூலியாகும்.
18
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள், ஒவ்வோர் ஆத்மாவும் (மறுமை) நாளைக்காக எதனை முற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கட்டும், இன்னும், அல்லாஹ்வை நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
19
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
முஹம்மது ஜான்
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்)மறந்து விட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இவர்கள்தான் பெரும்பாவிகள் ஆவார்.
IFT
எவர்கள் அல்லாஹ்வை மறந்துவிட்டு இருக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் தங்களையே மறந்துவிடும்படி அல்லாஹ் செய்துவிட்டான். இவர்கள்தாம் பாவிகளாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்து விட்டார்களே அத்தகையவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம், ஏனென்றால், (அல்லாஹ்வாகிய) அவன் (அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நற்பாக்கியங்களிலிருந்து) அவர்கள் தங்களேயே மறக்குமாறு செய்துவிட்டான், அத்தகையோர்தாம் (அல்லாஹ்வின் வழிபாட்டிலிருந்து) வெளியேறியவர்(களானபாவி)களாவர்.
20
لَا یَسْتَوِیْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِ ؕ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
முஹம்மது ஜான்
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
அப்துல் ஹமீது பாகவி
நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சொர்க்கவாசிகள் தான் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.)
IFT
நரகத்திற்குச் செல்பவர்களும், சுவர்க்கத்திற்குச் செல்பவர்களும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள்! சுவர்க்கத்திற்குச் செல்பவர்கள்தாம் உண்மையில் வெற்றியாளர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாகமாட்டார்கள், சொர்க்கவாசிகள்_அவர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
21
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْیَةِ اللّٰهِ ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஒரு மலையின் மீது நாம் இந்த குர்ஆனை இறக்கிவைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீர் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம்.
IFT
நாம் இந்தக் குர்ஆனை ஏதேனும் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது பணிவுள்ளதாகவும், அல்லாஹ்வின் அச்சத்தால் அது பிளந்துபோவதாகவும் நீர் கண்டிருப்பீர்! நாம், இந்த உதாரணங்களை மக்கள் முன் விளக்கிக் கூறுவது, அவர்கள் (தங்களின் நிலைமையைப் பற்றிச்) சிந்திக்கட்டும் என்பதற்காகத்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இந்தக்குர் ஆனை மலையின் மீது நாம் இறக்கிவைத்திருந்தால், அல்லாஹ்வின் பயத்தால், பணிந்ததாக, பிளந்து விடக் கூடியதாக அதை நிச்சயமாக நீர் கண்டிருப்பீர், மேலும், அந்த உதாரணங்கள்_அவற்றை மனிதர்களுக்கு அவர்கள் சிந்திப்பதற்காகவே நாம் கூறுகிறோம்.
22
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟
முஹம்மது ஜான்
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
அப்துல் ஹமீது பாகவி
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனில்லை. (அவனே) மறைவானதையும் வெளிப்படையானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.
IFT
அவன்தான் அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறெவரும் இல்லை. அவன் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அறிபவன். அவன் அளவிலாக் கருணையும் இணையிலாக்கிருபையும் உடையவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவன் (தான்) அல்லாஹ், அவன் எத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, (அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிகிறவன், அவனே அளவற்ற அருளாளன், மிகக் கிருபையுடையவன்.
23
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
அவன்தான் அல்லாஹ்! அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை. அவன்தான் அரசன்; மிகவும் தூய்மையானவன். முழுக்க முழுக்க சாந்தியுடையவன்; அமைதி அளிப்பவன்; பாதுகாவலன்; அனைவரையும் மிகைத்தவன்; தனது கட்டளையை வலிமையுடன் செயல்படுத்தக் கூடியவன்; பெருமைக்குரியவன். தூய்மையானவன் அல்லாஹ், மக்கள் புரியும் இணைவைப்புச் செயல்களை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவன் (தான்) அல்லாஹ், அவன் எத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, (அவன் தான் உண்மையான) பேரரசன், பரிசுத்தமானவன், சாந்தி அளிப்பவன், அபயமளிப்பவன், கண்கானிப்பவன், (யாவரையும்) மிகைத்தவன், அடக்கி ஆளுபவன், பெருமைக்குரியவன்_அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
24
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ؕ یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
முஹம்மது ஜான்
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்.
IFT
அந்த அல்லாஹ்தான் படைப்புக்கான திட்டம் வகுப்பவனும் அதனைச் செயல்படுத்துபவனும் அதற்கேற்ப வடிவம் அமைப்பவனுமாவான். அவனுக்கு மிக அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.