البينة
ஸூரா 98 — அல்பய்யினா | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
8 வசனங்கள் · ஜுஸ் 30
1
لَمْ یَكُنِ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ مُنْفَكِّیْنَ حَتّٰی تَاْتِیَهُمُ الْبَیِّنَةُ ۟ۙ
முஹம்மது ஜான்
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
இதை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரை (ஒரு தெளிவான அத்தாட்சி வந்தால், அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைநிராகரிப்பாளர்கள் தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிவிடக்கூடியவராய் இருக்கவில்லை, தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதக்காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்துவிட்டார்களே அத்தகையோர், தெளிவான ஆதாரம் அவர்களுக்கு வரும்வரை (நிராகரிப்பதை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை.
2
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ یَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۟ۙ
முஹம்மது ஜான்
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்.
IFT
தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வரும்வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அத்தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து (வந்து)ள்ள தூதர்; (ஆவார். அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட) பரிசுத்த ஆகமங்களை அவர் ஓதிக்காண்பிக்கிறார்.
3
فِیْهَا كُتُبٌ قَیِّمَةٌ ۟ؕ
முஹம்மது ஜான்
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
IFT
அவற்றில் முற்றிலும் நேர்மையான நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் தீர்க்கமான சட்டதிட்டங்கள் உள்ளன.
4
وَمَا تَفَرَّقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنَةُ ۟ؕ
முஹம்மது ஜான்
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டிருந்த) வேதத்தை உடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நம் தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்.
IFT
முன்பு வேதம் அருளப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்து) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோர் - தெளிவான ஆதாரம் (நபியும் அவர் மூலமாக வேதமும்) தங்களுக்கு வந்த பின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை.
5
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬ حُنَفَآءَ وَیُقِیْمُوا الصَّلٰوةَ وَیُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِ ۟ؕ
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
IFT
மேலும், தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும் என்பதையும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சரியான, நேரிய தீன் ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வை – அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை அவர்கள் நிறைவேற்றுவதற்காகவும் ஜகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவுமே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை; இன்னும், இதுதான் நேரான மார்க்கமாகும்.
6
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ فِیْ نَارِ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ اُولٰٓىِٕكَ هُمْ شَرُّ الْبَرِیَّةِ ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக நரக நெருப்பில் தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக, நரக நெருப்பில்தான் வீழ்வார்கள்; அதில் நிரந்தரமாய் வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகக் கீழ்த்தரமானவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இந்த நபியின் வரவை எதிர்பார்த்தவர்களில்) வேதத்தையுடையோர்களிலும், இணைவைத்துக் கொண்டிருப்போரிலும், நிச்சயமாக (இவரை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், நரக நெருப்பில்தான் இருப்பார்கள்; அதில் (அவர்கள்) நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்; அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்.
7
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓىِٕكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِ ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள்(அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
8
جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ رَبَّهٗ ۟۠
முஹம்மது ஜான்
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்' என்னும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
IFT
அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய (நற்)கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும்.