اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
(நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரு பாகங்களைவிட மிகக் குறைவாக, இன்னும், அதில் பாதியில், இன்னும், அதில் மூன்றில் ஒருபாக (நேர)த்தில் (இரவுத் தொழுகைக்காக) நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமதிரட்சகன் அறிவான்; இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயம் செய்து (அதன் நேரங்களை அளவாக அமைத்து)ள்ளான்; நீங்கள் அதனை சரிவரக் கணக்கிடவே முடியாதென்பதை அவன் அறிந்துள்ளான்; ஆகவே, உங்களை அவன் மன்னித்துவிட்டான்; எனவே குர் ஆனிலிருந்து (உங்களுக்கு) இயன்றதை ஓதுங்கள்; (ஏனெனில்,) உங்களில் இரவு வணக்கத்தை விட்டும், அனுமதி பெறும் நோயாளிகளும், அல்லாஹ்வின் பேரருளைத் தேடியவர்களாக பூமியில் பிரயாணம் செய்யும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வேறு சிலரும், இருப்பார்கள் என்பதை அவன் அறிந்துளளான்; ஆகவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்; மேலும், தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்விற்கு அழகான கடனாக கடனும் கொடுங்கள்; மேலும், நன்மையிலிருந்து உங்களுக்காக எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகவும், (நற்)கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்பும் தேடுங்கள்; நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.