1
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
முஹம்மது ஜான்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதிக்கின்றன. (இவற்றின்) ஆட்சியும் அவனுக்குரியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன, ஆட்சி அவனுக்கே உரியது, மேலும், புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும், அவன் ஒவ்வொரு பொருளின் மீது மிக்க ஆற்றலுடையவன்.
2
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
முஹம்மது ஜான்
(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன்; உங்களில் காஃபிரும் உண்டு; முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களைப் படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
IFT
அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களை அவன் படைத்தான், பின்னர், நிராகரிப்பவரும் உங்களில் உண்டு, (அவனை) விசுவாசிப்பவரும் உங்களில் உண்டு, மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.
3
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
முஹம்மது ஜான்
வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கிறான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதை மிக அழகாகவும் ஆக்கிவைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக்கொண்டு படைத்தான். மேலும், உங்களுக்கு வடிவம் அமைத்தான். உங்கள் வடிவங்களை மிகவும் அழகிய முறையில் அமைத்தான். இறுதியில் அவனிடமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தீர்க்கமான அவனது முடிவால்) நீதியைக் கொண்டு, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருக்கின்றான், அவனே உங்களுக்கு உருவம் அமைத்தான், பின்னர் உங்களுடைய உருவங்களை மிக்க அழகாகவும் ஆக்கிவைத்தான், அவனிடமேதான் (நீங்கள் அனைவரும்) திரும்பிச்செல்ல வேண்டியதிருக்கின்றது.
4
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகிறான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் அறிகின்றான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். மேலும், அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் நன்கறிகிறான், நீங்கள் இரகசியமாக்குவதையும், நீங்கள் பகிரங்கமாக்குவதையும் அவன் நன்கறிகிறான், மேலும் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
5
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
IFT
எவர்கள் இதற்கு முன்பு நிராகரிக்கவும், பின்னர் தங்களுடைய செயல்களின் கெடுதல்களைச் சுவைக்கவும் செய்தார்களோ அவர்களைப் பற்றி உங்களுக்குச் செய்தி எதுவும் எட்டவில்லையா, என்ன? மேலும், துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) முன்னர் நிராகரித்துவிட்டோரின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர் அவர்கள் தங்கள் செயலின் தீய பலனை (இவ்வுலகில்) சுவைத்தார்கள். அன்றியும் (மறுமையிலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
6
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
முஹம்மது ஜான்
இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ: (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்.
IFT
அவர்கள் இந்தக் கதிக்கு ஆளாகக் காரணம் அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் வெளிப்படையான ஆதாரங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் கூறினார்கள்: “மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்?” இவ்விதம் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மேலும், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (ஏனெனில்) நிச்சயமாக தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக (அனுப்பப்பட்ட நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள், பின்னர், அவர்களோ “(நம்மைப் போன்ற) மனித (இனத்தவ)ர்களா நமக்கு நேர் வழிகாட்டுவார்கள்?” என்று கூறினர், பின்னர் (அவர்களை) அவர்கள் நிராகரித்துவிட்டு, புறக்கணித்தும் சென்றுவிட்டனர் என்ற காரணத்தினாலாகும், அல்லாஹ் அவர்களை விட்டும் தேவையற்றவனாகிவிட்டான், மேலும் அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன்.
7
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
முஹம்மது ஜான்
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறல்ல. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.”
IFT
இறந்த பின் மீண்டும் ஒருபோதும் அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரிப்பாளர்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாதாடுகின்றார்கள். (அவர்களிடம்) நீர் கூறும்: “இல்லை, என் அதிபதி மீது சத்தியமாக! நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் (உலகில்) நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக “அவ்வாறல்ல! என் இரட்சகன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள், பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவிக்கப்படுவீர்கள், மேலும், அ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்.”
8
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேத மென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
எனவே, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், நாம் இறக்கி வைத்திருக்கும் ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நாம் இறக்கி வைத்தோமே அத்தகைய (இவ் வேதமாகிய) பிரகாசத்தையும் விசுவாசியுங்கள், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்குணர்பவன்.
9
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
முஹம்மது ஜான்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்திவிடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்.
IFT
ஒன்றுகூடும் நாளில் அவன் உங்கள் அனைவரையும் திரட்டும்போது (இதுபற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்துவிடும்). அந்த நாள் மக்கள், ஒருவர் மற்றவரைப் பொறுத்து வெற்றி தோல்வி பெறும் நாளாக இருக்கும். மேலும், யாரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரெனில், அவருடைய பாவங்களை அல்லாஹ் அகற்றிவிடுவான்; கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் அவர்களை நுழைவிப்பான். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே, மகத்தான வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளைக்காக உங்களை அவன் ஒன்று கூட்டும் நாளில், (சகலவற்றைப்பற்றியும் அறிவிக்கப்படும்) அதுதான் (விசுவாசிகளுக்கு இலாபம் தரும் நாளும், காஃபிர்களுக்கு) நஷ்டமளிக்கும் நாளாகும், மேலும், எவர் அல்லாஹ்வை விசுவாசித்து, நற்கருமங்களையும் செய்கிறாரோ அவருடைய தீயவைகளை அவரை விட்டு நீக்குவான், அவரை சுவனபதிகளிலும் (அல்லாஹ்வாகிய) அவன் புகச்செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், நிரந்தரமாக அவற்றில் அவர்கள் (தங்கி) இருப்பவர்கள், அது மிக்க மகத்தான வெற்றியாகும்.
10
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
முஹம்மது ஜான்
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாதிகளே; அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடமாகும்.
IFT
மேலும், யார் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். அதிலேயே அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்_அவர்கள் நரகவாசிகளே, அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள். மேலும், அது மிகக்கெட்ட சேருமிடமாகும்.
11
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
ஒருபோதும் எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல்! எவரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால் அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் வழிகாட்டுதலை வழங்குகின்றான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எத்துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டே தவிர (எவரையும்) பீடிப்பதில்லை, ஆகவே, எவர் அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ அவருடைய இதயத்திற்கு (அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதை பொருந்திக் கொண்டு பொருமையுடனிருக்க) அவன் வழிகாட்டுகிறான், அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.
12
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்.
IFT
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். எனினும் நீங்கள் கீழ்ப்படிவதைவிட்டு முகம் திருப்பினால் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர நம்முடைய தூதரின் மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், இன்னும்,(அவனுடைய) தூதருக்கு கீழ்படியுங்கள், ஆகவே, நீங்கள் புறகணித்து விட்டால் நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம் அவர் (தம்தூதை) தெளிவாக எத்தி வைப்பதுதான்.
13
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள்.
IFT
அல்லாஹ் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை. எனவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்_அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, ஆகவே, விசுவாசிகள் (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்.
14
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
IFT
இறைநம்பிக்கைகொண்டவர்களே! உங்களுடைய மனைவியரிலும், பிள்ளைகளிலும் சிலர் உங்கள் பகைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நீங்கள் அவர்களுடைய செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால் மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், மேலும், (அவர்களில் ஏற்பட்டவற்றை) நீங்கள் மன்னித்து, (அதைப்) பொருட்படுத்தாதும் விட்டு விட்டு, இன்னும், (அவர்களின் குற்றங்களை) பொறுத்தருள்வீர்களாயின், நிச்சயமாக அல்லாஹ்(வும்) உங்களுடைய பாவங்களை மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
15
اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
முஹம்மது ஜான்
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது.
IFT
உங்களுடைய செல்வங்களும் உங்களுடைய பிள்ளைகளும் ஒரு சோதனையே! மேலும், அல்லாஹ்விடம்தான் மகத்தான கூலி உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையேயாகும், அல்லாஹ்_ அவனிடமே மகத்தான கூலி இருக்கின்றது.
16
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனு(டைய வசனங்களு)க்குச் செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து, தர்மமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.
IFT
எனவே, உங்களால் முடிந்தவரை அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள். மேலும், செவிதாழ்த்திக் கேளுங்கள்; கீழ்ப்படியுங்கள். மேலும், உங்கள் செல்வத்தைச் செலவு செய்யுங்கள். இது உங்களுக்கே சிறந்ததாகும். தம்முடைய உள்ளத்தின் உலோபித்தனத்தை விட்டு எவர்கள் விலகி இருக்கின்றார்களோ அத்தகையவர்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அவனின் கட்டளைகளுக்குச்) செவியும் சாயுங்கள், மேலும், (அவனுக்குக்) கீழ்படியுங்கள், உங்களின் நலனுக்காக (அல்லாஹ்வின் வழியில் செல்வங்களைச்) செலவும் செய்யுங்கள். தன் மனதின் உலோபத்தனத்திலிருந்து எவர் காக்கப்படுகிறாரோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்..
17
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும் மிக்க சகிப்பவனும் ஆவான்.
IFT
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தால் அதனை அவன் உங்களுக்குப் பன்மடங்கு அதிகமாக்கித் தருவான். மேலும் உங்கள் பாவங்களைப் புறக்கணித்து விடுவான். அல்லாஹ் உரிய மதிப்பளிப்பவனாகவும், சகிப்புத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுக்கு அழகான கடனாக நீங்கள் கடன் கொடுப்பீர்களாயின், அதனை அவன் உங்களுக்கு இரட்டிப்பாக்கி வைப்பான், இன்னும் உங்(கள் குற்றங்)களை மன்னித்துவிடுவான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன்.
18
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
முஹம்மது ஜான்
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்.
IFT
மறைந்திருப்பவை மற்றும் வெளிப்படையானவை அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்; வல்லமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்) மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிகிறவன், (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.