یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கையுடைய பெண்கள் நாடு துறந்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதனைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய நம்பிக்கையின் உண்மைநிலையை அல்லாஹ்தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியாக இருக்க) ஆகுமானவர்களல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு ஆகுமானவர்கள் அல்லர். அவர்களுடைய (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளித்திருந்த மஹ்ரை* அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மேலும், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால்! மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களிடம் திரும்பக்கேளுங்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் தங்களின் முஸ்லிமான மனைவிமார்களுக்குக் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களும் திரும்பக் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத்துச் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள், அவர்களுடைய விசுவாசத்தை அல்லாஹ் மிக அறிந்தவன், ஆகவே, (நீங்கள் சோதித்ததில்) அவர்களை விசுவாசிகளான பெண்கள் தாம் என்று நீங்கள் அறிந்தால், அவர்களை நிராகரிப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள், (ஏனென்றால் இஸ்லாத்திற்கு வந்த பெண்களாகிய) அவர்கள், அவர்களுக்கு (மனைவியராக இருக்க) ஆகுமானவர்களல்லர், அவர்களும் இவர்களுக்கு(க் கணவர்களாக இருக்கவும்) ஆகுமானவர்களல்லர், (எனினும், இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததையும் அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள், நீங்கள் அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களைக் கொடுத்துவிடுவீர்களானால் அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்வதும் உங்கள் மீது குற்றமில்லை, மேலும், விசுவாசங்கொள்ளாத அவர்களின் விவாக பந்தங்களை நீங்கள் பற்றிப்பிடிக்கவேண்டாம், (அவர்களின் பந்தங்களை நீக்கி விவாகரத்துச் செய்து விடுங்கள், அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததையும் (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்போரிடம்) கேளுங்கள், (உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவியருக்குத்) தாங்கள் செலவு செய்ததையும் அவர்கள் (உங்களிடம்) கேட்கட்டும், இது அல்லாஹ்வுடைய தீர்ப்பாகும், அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.