الحجرات
ஸூரா 49 — அல்ஹுஜுராத் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
18 வசனங்கள் · ஜுஸ் 26
1
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னிலையில் நீங்கள் முந்தாதீர்கள், மேலும், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
2
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِیِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சலிட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்கள் நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதை) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக் கொள்வதைப் போல், நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிட வேண்டாம், நீங்கள் அதனை அறியாத நிலையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! நபியினுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள், மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல், அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள், (ஏனெனில், இதனை) நீங்கள் உணர்ந்துக்கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும்.
3
اِنَّ الَّذِیْنَ یَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰی ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்கள் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து இறையச்சத்திற்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு.
IFT
திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் (பேசும் பொழுது) தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே அத்தகையோர்_அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக அல்லாஹ் பரிசுத்தமாக்கி வைத்தானே அத்தகையோராவர், அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
4
اِنَّ الَّذِیْنَ یُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (நீர் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உம்மை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் (மார்க்கத்தை) விளங்காதவர்களே!
IFT
(நபியே, உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மைக் கூப்பிடுவோரில் பெரும்பாலோர் அறியாதவர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக (உம்முடைய) அறைகளுக்குப் பின்னாலிருந்து சப்தமிட்டு உம்மை அழைக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களில் பெரும்பாலோர் (உம்மை அழைத்துப் பேசும் முறையை) விளங்கமாட்டார்கள்.
5
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰی تَخْرُجَ اِلَیْهِمْ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(உமது அறையிலிருந்து) நீர் வெளிப்பட்டு அவர்களிடம் நீர் வரும் வரை அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
IFT
நீர் வெளியே வரும் வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால், அது அவர்களுக்கே நலம் தரத்தக்கதாய் இருந்திருக்கும். அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள்_அவர்களிடம் நீர் வெளியேறி வரும் வரையில் பொறுமையோடு இருந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருந்திருக்கும், இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் மிகக் கிருபையுடையவன்.
6
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَیَّنُوْۤا اَنْ تُصِیْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰی مَا فَعَلْتُمْ نٰدِمِیْنَ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! (ஃபாஸிக் எனும்) தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தார்க்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாதிருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதனைத் தீர்க்க விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால்,) பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள்.
7
وَاعْلَمُوْۤا اَنَّ فِیْكُمْ رَسُوْلَ اللّٰهِ ؕ لَوْ یُطِیْعُكُمْ فِیْ كَثِیْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَیْكُمُ الْاِیْمَانَ وَزَیَّنَهٗ فِیْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَیْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْیَانَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الرّٰشِدُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தான் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதையே அழகாக்கியும் வைத்தான். மேலும், நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான் இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர்.
IFT
நன்றாக அறிந்து கொள்ளுங்கள்; உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்; பல விவகாரங்களில் உங்கள் சொல்லை அவர் ஏற்றுக் கொள்வாராயின், நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள். ஆனால், அல்லாஹ் உங்களுக்கு (ஈமானில்) நம்பிக்கையில் பற்றுதலை ஏற்படுத்தினான். அதனை உங்கள் உள்ளத்திற்கு உகந்ததாய் ஆக்கினான். மேலும், நிராகரிப்பையும் பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வுடைய தூதர் இருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள், (நீங்கள் விரும்பும்) காரியத்தில் அநேகவற்றில் அவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், நிச்சயமாக நீங்கள் சிரமத்திற்குள்ளாகிவிடுவீர்கள், எனினும், அல்லாஹ் விசுவாசத்தை உங்கள் பால் விருப்பமானதாக ஆக்கினான், உங்கள் இதயங்களில் அதனையே அலங்கரமாக்கியும் வைத்தான், மேலும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு அவன் வெறுப்பாக்கியும் வைத்தான். இத்தகையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள்.
8
فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
முஹம்மது ஜான்
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அருளாக, அருட்கொடையாக உள்ளது; மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
(மிகச்சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும். இன்னும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள பேரருளாக, (அவனுடைய) அருட்கொடையாக இருக்கும், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
9
وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரை, அவர்களிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
IFT
மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதனம் செய்து வையுங்கள், பின்னர், அவர்களில் ஒரு கூட்டத்தார், மற்றொரு கூட்டத்தாரின் மீது (அக்கிரமம் செய்து) வரம்பு மீறினால், (வரம்பு மீறிய) அக்கூட்டத்தவர் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பி வரும் வரை நீங்கள் போர்செய்யுங்கள், அக்கூட்டத்தார் (அல்லாஹ்வின் கட்டளையின்பால்) திரும்பிவிட்டால், அவ்விருவருக்கிடையே நீதியைக் கொண்டு சமாதானம் செய்துவையுங்கள், (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
10
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்.
IFT
இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர் ஆவார்கள். எனவே, உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படக் கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே! ஆகவே, (சண்டையிட்டுக் கொள்ளும்) உங்களுடைய இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள், நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக அல்லாஹ்வுக்குப் பயந்தும் கொள்ளுங்கள்.
11
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ ۚ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள்.
IFT
இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம், (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம், பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம், உங்களில் சிலர் சிலரை (அவருக்கு வைக்கப்படாத) பெயர்களால் அழைக்கவும் வேண்டாம், விசுவாசங்கொண்ட பின்னர், (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீய பெயர் (கூறுவது) மிகக் கெட்டதாகி விட்டது, எவர்கள் (இவைகளிலிருந்து) தவ்பாச் செய்து மீளவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.
12
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ ؗ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا یَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَیُحِبُّ اَحَدُكُمْ اَنْ یَّاْكُلَ لَحْمَ اَخِیْهِ مَیْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; திண்ணமாக, அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! (தவறான) எண்ணத்தில் பெரும்பாலனவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள், (ஏனெனில்,) நிச்சயமாக எண்ணத்தில் சில பாவமாகும், (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்கவும் வேண்டாம், உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம், உங்களில் யாதொருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்து) சவமாயிருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது, அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து தவ்பாச் செய்து மீள்வோரின்) பாவமீட்சியை மிகுதியாக ஏற்பவன் மிகக் கிருபையுடையவன்.
13
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُ وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآىِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟
முஹம்மது ஜான்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்.
IFT
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம், இன்னும், ஒருவருக்கொருவர் நீங்கள் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களை கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான், நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) நன்கறிந்தவன், நன்குணர்பவன்.
14
قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا یَدْخُلِ الْاِیْمَانُ فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاِنْ تُطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا یَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின், உங்கள் நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்து விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்.''
IFT
இந்த நாட்டுப்புற அரபிகள் கூறுகின்றார்கள்: “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.” இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; வேண்டுமானால், ‘நாங்கள் கீழ்ப்படிந்தோம்’ என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந்தீர்களாயின், அவன் உங்கள் செயல்களுக்கான கூலியில் எந்தக் குறையும் வைக்கமாட்டான். திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் பிழைபொறுப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அரபிகளிலுள்ள) நாட்டுப்புறத்து வாசிகள் “நாங்கள் விசுவாசித்திருக்கிறோம்” எனக் கூறுகின்றனர், (அவர்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் விசுவாசிக்கவில்லை, எனினும், நாங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருக்கிறோம்” என்று நீங்கள் கூறுங்கள், (ஏனெனில்) விசுவாசம் உங்களுடைய இதயங்களில் நுழையவேயில்லை; நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின், உங்களுடைய (நன்மையான) செயல்களிலிருந்து எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிடமாட்டான், நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
15
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ یَرْتَابُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள்.
IFT
உண்மையில், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மையான) விசுவாசிகள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய செல்வங்களாலும், தம் உயிர்களாலும் (ஜிஹாத் எனும்) அறப்போர் செய்தார்களே அத்தகையோர்தாம், அவர்களே (தங்கள் விசுவாசத்தில்) உண்மையாளர்கள்.
16
قُلْ اَتُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِیْنِكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: (‘‘நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிந்தவன். (தவிர, மற்ற) எல்லா பொருள்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன்.''
IFT
(நபியே! நம்பிக்கைகொண்டதாக வாதிடுகின்ற) இவர்களிடம் கூறும்: “என்ன, உங்களது மார்க்கம் குறித்து அல்லாஹ்வுக்கு நீங்கள் அறிவித்துக்கொடுக்கின்றீர்களா? உண்மை யாதெனில், அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் அறிகின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: (“விசுவாசம் கொண்டிருக்கிறோம் என்ற உங்கள் கூற்றின் மூலம்) உங்கள் மார்க்கத்தை நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லாஹ்வோ வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நன்கு அறிவான், அன்றியும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிகிறவன்.”
17
یَمُنُّوْنَ عَلَیْكَ اَنْ اَسْلَمُوْا ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَیَّ اِسْلَامَكُمْ ۚ بَلِ اللّٰهُ یَمُنُّ عَلَیْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِیْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உம்மீது உபகாரம் செய்து விட்டதாக கருதுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் என்மீது உபகாரம் செய்து விட்டதாக எண்ணாதீர்கள். மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதை நன்கறிந்து கொள்வீர்கள்).''
IFT
இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக, நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கின்றான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததன் காரணமாக, உமக்கு உபகாரம் செய்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர், (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தில் சேர்ந்ததனால் என் மீது உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள், எனினும், விசுவாசம் கொள்ள வாய்ப்பளித்து உங்களை நேர் வழியில் செலுத்தியதனால் அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கின்றான், நீங்கள் (உங்கள் விசுவாசத்தில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதனை நன்கறிந்து கொள்வீர்கள்.”)
18
اِنَّ اللّٰهَ یَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நன்கறிவான். ஆகவே, நீங்கள் செய்பவற்றையும் அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவான ஒவ்வொன்றையும் அறிகின்றான். நீங்கள் செய்பவை அனைத்தும் அவனது பார்வையில் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நன்கறிவான். அல்லாஹ்வோ நீங்கள் செய்பவைகளைப் பார்க்கிறவன்.