ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மாற்று மத சகோதரர்கள் கேட்கிறார்கள், நீங்கள் அல்லாஹ்வை மரியாதையுடன் அழைக்காமல் ''அவன்'' என்று அழைக்கிறீர்களே, மரியாதையாக

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மாற்று மத சகோதரர்கள் கேட்கிறார்கள், நீங்கள் அல்லாஹ்வை மரியாதையுடன் அழைக்காமல் ''அவன்'' என்று அழைக்கிறீர்களே, மரியாதையாக ''அவர்'' என்று அழைக்கக் கூடாதா? இதன் விளக்கம் என்ன?
பதில்
பதில்:

இது அரபு மொழியுடைய ஒரு பிரச்சினை அல்ல. இது தமிழுடைய பிரச்சனை. தமிழிலே நாம் இறைவனுக்கு ''அவர்'' என்று சொன்னாலும் சரி, ''அவன்'' என்று சொன்னாலும் சரி மார்க்க ரீதியாக எந்தத் தடையும் இல்லை. "இறைவனிடத்தில் நான் கேட்டேன், அவர் எனக்கு பதில் சொன்னார்" என்று சொன்னால் மார்க்க ரீதியாக எந்தப் பிழையும் இல்லை.

அரபு மொழியைப் பொறுத்தவரைக்கும் நாம் "ஹுவ" (Huwa) என்று சொல்கிறோம். மரியாதையாகச் சொன்னாலும் "ஹுவ" என்றுதான் சொல்லுவோம்; சாதாரண நிலையில் சொன்னாலும் "ஹுவ" என்றுதான் சொல்லுவோம். அவன், அவர் என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் அரபியில் "ஹுவ" என்றுதான் உபயோகிக்கப்படும்.

தமிழ் மொழியுடைய அடிப்படையை எடுத்தோம் என்று சொன்னால், "அவர்" என்று தமிழில் உபயோகப்படுத்தப்பட்டால் அது பன்மை (Plural) என்றதுதான் உண்மையிலேயே தமிழ் மொழியுடைய அடிப்படை. அது ''கள்'' விகுதி வந்தாலும் வராது விட்டாலும், "அவர்" என்று சொன்னாலேயே அது பன்மை என்று ஆகிவிடும் என்பதுதான் தமிழ் மொழியுடைய அடிப்படை.

இதை கவனித்ததனால் தான் இஸ்லாமிய மார்க்கத்துடைய மிக முக்கியமான ஒரு அடிப்படையான ஏகத்துவம் (இறைவன் ஒருவன், தனித்துவமானவன்) என்பதை மொழிபெயர்க்கும் போது, அந்த ஓர்மையை (Singular) அந்த எழுத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக "அவன்" என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்தார்கள். இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவம் என்பதால், அதில் எதுவும் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக, இறைவன் தன்னைக் குறித்து ஒருமையாகச் சொல்லும் எல்லா இடங்களிலும் "அவன்" என்றும், பன்மையாகச் சொல்லும் இடங்களில் பன்மையான வார்த்தைகளையும் உபயோகித்தார்கள்.

எனவே, இறைவன் ஒருவன் என்பதை குறிப்பதற்காக மாத்திரம், இறைவனுடைய தனித்துவத்தை குறிப்பதற்காக மாத்திரம் இந்த "அவன்" என்ற சொல்லை தேர்ந்தெடுத்தார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது மரியாதை என்கின்ற பகுதியோடு எந்த வகையிலும் முரண் இல்லை.

இரண்டாவதாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனை உண்மையிலேயே மதிக்கின்ற ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம் மட்டும்தான். காரணம், இறைவன் தன்னை பற்றி என்ன சொன்னானோ அதைத் தவிர முஸ்லிம் சமுதாயம் இறைவனுக்கு வேறு எதையும் கற்பிக்காது. ஆனால் முஸ்லிம் அல்லாதவர்கள் இறைவனுக்கு மனைவி இருப்பதாகச் சொல்வார்கள், பிள்ளை இருப்பதாகச் சொல்வார்கள், மறப்பதாக, விளையாடுவதாக, சிரிப்பதாக, பொறாமைப்படுவதாக, அநியாயம் செய்வதாகச் சொல்வார்கள். தாங்களே விரும்பாத உருவங்களை எல்லாம் இறைவனுக்குக் கொடுப்பார்கள். இப்படி எல்லாம் இறைவனுக்கு கொடுத்துவிட்டு, நாம் முஸ்லிம்கள் ஒருமையாகச் சொல்வதை மட்டும் அவமரியாதையாக நோக்கக் கூடாது. ஒருவனுக்கு என்ன தகுதி இருக்கணுமோ அந்த தகுதியை நாமாக தலைகீழாகக் கொடுப்பதுதான் உண்மையிலே மிகப்பெரிய அவமரியாதை. அதனால்தான் அல்லாஹுத்தஆலா, "இணைவைத்தல் என்பது மிகப்பெரிய அநியாயம்" என்று சொல்லிக் காட்டுகிறான்.

முஸ்லிம்கள் இறைவனுக்குக் கொடுக்கும் மரியாதை என்னவென்றால், அவனை மட்டுமே வணங்குவது. எந்த ஒரு தாயையோ, தந்தையையோ, ஆசிரியரையோ, எஜமானனையோ இறைவனுடைய தரத்திற்கு உயர்த்த மாட்டார்கள். இதுவே இறைவனுக்கு கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை. "அவன்" என்ற வார்த்தையைப் பொறுத்தவரைக்கும், இறைவனுடைய ஓர்மையைக் காட்டுவதற்காகத்தான் தமிழில் அந்த வார்த்தையை செலக்ட் பண்ணிக்கிறோமே தவிர இதில் எவ்வித அவமரியாதையும் இல்லை. ஆங்கிலத்தில் "He" என்றுதான் சொல்கிறோம், அதில் மரியாதை, அவமரியாதை என்று வருவதில்லை. அரபியிலும் அப்படித்தான்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →