"ஹலாலான காரியங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்" என்றும், "தலாக்கின் காரணமாக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது" என்றும் வரக்கூடிய செய்திகள் மிக மிக மிகப் பலவீனமான மற்றும் அடிப்படையற்ற ஹதீஸ்கள் ஆகும்.
அல்லாஹ்வுக்கு நிர்ப்பந்தம் என்று எதுவுமே கிடையாது. அவன் வேண்டா வெறுப்பாக ஒன்றை ஹலால் ஆக்க வேண்டிய எந்த அவசியமும் அவனுக்கு இல்லை. தலாக் (விவாகரத்து) என்பது, கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாத ஒரு சூழ்நிலை வருகின்ற பொழுது, இஸ்லாம் வழங்கிய ஒரு தெளிவான அனுமதியும், சட்டப்பூர்வமான வழிகாட்டலுமே ஆகும். இஸ்லாம் விவாகரத்தை கட்டாயப்படுத்தவில்லை; ஆனால் ஒழுக்கமற்ற வாழ்க்கை, மார்க்கம் இல்லாத வாழ்க்கை, அல்லது நிம்மதியாக வாழவே முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, விவாகரத்து செய்து கொள்வதுதான் சிறந்த வழி என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.
விவாகரத்து செய்வதற்கு முன் அதன் பின்விளைவுகளை (குழந்தைகளின் எதிர்காலம், பெண்ணின் வாழ்க்கை) நிதானமாக யோசிக்க வேண்டும். முடிவெடுப்பது எளிது, ஆனால் அதனைச் சுமக்கும் மனநிலை இருக்கிறதா என்பதை இருவருமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால், விவாகரத்து செய்வது இறைவனுக்கு வெறுக்கத்தக்கது என்றோ, அதற்காக அர்ஷ் நடுங்கும் என்றோ இஸ்லாம் எங்கும் கூறவில்லை. அவை முற்றிலும் பலவீனமான செய்திகளாகும்.