அகீகாவை பொறுத்தவரைக்கும் இஸ்லாமிய அடிப்படையில் ஆடு கொடுப்பதுதான் சரியான சுன்னாவாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகாவுக்கு ஆட்டை மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார்கள் (ஆண் குழந்தைக்கு இரண்டு, பெண் குழந்தைக்கு ஒன்று). ரசூல் (ஸல்) அவர்களது நடைமுறையிலும், அவர்களது பேரக்குழந்தைகளான ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோருக்கு அவர்கள் ஆட்டைத்தான் அகீகாவாக கொடுத்தார்கள். நபித்தோழர்களின் நடைமுறையிலும் மாடு அல்லது ஒட்டகம் அகீகாவாக கொடுக்கப்பட்டதற்கு எவ்வித ஆதாரப்பூர்வமான செய்திகளும் கிடையாது.
சிலர், "நான்கு மத்ஹபுகளும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் (ACJU) மாடு, ஒட்டகம் கொடுக்கலாம் என்று கூறுகிறதே, நாங்க அதைத்தான் பின்பற்றுவோம்" என்று வாதிடுகிறார்கள். இதில் பல மார்க்கத் தவறுகள் உள்ளன. முதலாவதாக, நான்கு மத்ஹபுகளும் இவ்வாறு கூறவில்லை. ஹனபி, ஷாபிஈ, ஹம்பலி ஆகிய மூன்று மத்ஹபுகள் கூறினாலும், மதீனாவில் வாழ்ந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் மாலிக்கி மத்ஹபு, அகீகாவுக்கு மாடு அல்லது ஒட்டகம் கொடுக்கக் கூடாது, ஆடு மாத்திரமே கொடுக்க வேண்டும் என்று சுன்னாவுக்கு மிக நெருக்கமான தீர்ப்பையே வழங்கியுள்ளது. எனவே "அனைத்து மத்ஹபும் கூறுகிறது" என்பது தவறான தகவலாகும்.
இரண்டாவதாக, குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக ஒரு தீர்ப்பு மத்ஹபில் இருந்தாலும் அதனைத்தான் பின்பற்றுவோம் என்று ஒருவர் கூறினால், அவர் சுன்னாவைப் பின்பற்ற விரும்பவில்லை என்று நாமே சாட்சியாக இருந்து கொள்ள வேண்டியதுதான். மேலும் சிலர், "மாடு கொடுப்பதில் என்ன பாவம் இருக்கிறது?" என்று அறியாமையாகக் கேட்கிறார்கள். உழ்ஹிய்யா (குர்பானி) கொடுப்பதற்குப் பெருநாள் தொழுகைக்குப் பின்தான் அறுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஒருவன் தொழுகைக்கு முன்பே அறுத்தாலும் பாவம் இல்லை என்று கூற முடியுமா? அதேபோன்றுதான் இதுவும். ரசூல் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த சுன்னாவிற்கு மாற்றமாக, சொந்த அறிவை நுழைத்து ஒரு இபாதத்தை மாற்றிச் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். மார்க்கம் காட்டித்தராத வழியில் செயல்படுவது கட்டாயம் பாவமேயாகும்.
சிலர் உழ்ஹிய்யாவோடு (குர்பானி) இதனை ஒப்பிடுகிறார்கள் (கியாஸ் செய்கிறார்கள்). உழ்ஹிய்யாவில் நபிகளார் ஆடு, மாடு, ஒட்டகம் மூன்றையும் அறுத்துள்ளார்கள், ஆனால் அகீகாவில் ஆட்டை மாத்திரமே குறிப்பிட்டுள்ளார்கள். மாடு கொடுக்கலாம் என்று கூறுபவர்களிடம், "அப்படியானால் கோழி, சேவல் அல்லது மான் இறைச்சியைக் கொடுக்கலாமா?" என்று கேட்டால், அதற்கு அவர்களால் எவ்வித வரம்பையும் ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. எனவே, எவ்வித கருத்து முரண்பாடுகளுக்கும் செல்லாமல், ரசூல் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று ஆட்டை மாத்திரமே அகீகாவாக கொடுப்பதுதான் தூய்மையான சுன்னாவாகும்.