ஒரு நபர் அப்பட்டமாக ஷிர்க் (இணைவைப்பு) செய்கின்றவர் என்பது நமக்கு உறுதியாகத் தெரிந்தால், அவர் மரணித்த பின் அவரது ஜனாஸாத் தொழுகையில் நாம் கலந்து கொள்ளவோ, அவருக்காகத் தொழுகை நடத்தவோ, அல்லது அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடவோ முற்றுமுழுதாகக் கூடாது.
ஏனெனில், "இணைவைப்பவர்களை அல்லாஹுத்தஆலா ஒருபோதும் மன்னிக்க மாட்டான்" என்று அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஒருவருக்கு உளூ இல்லாவிட்டால் எப்படிப் பின்னால் நின்று தொழ மாட்டோமோ, அதைவிடப் பாரதூரமானது இணைவைப்பு. லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவராக அவர் இருந்தாலும், இணைவைப்பில் மூழ்கி மரணித்தவருக்கு அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கிடையாது. இது அவரை நரகவாதி எனத் தீர்ப்பளிப்பதல்ல; மாறாக அவரது அப்பட்டமான இணைவைப்புச் செயல்பாட்டினால் நாம் அவருக்காகப் பிரார்த்திப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதே மார்க்கச் சட்டமாகும். எனவே, இணைவைப்பாளரின் ஜனாஸாத் தொழுகையை நாம் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.