நகம் வெட்டுகின்ற போது, முதலில் சுட்டு விரலில் (முசப்பிஹா) ஆரம்பிக்க வேண்டும், பின்னர் நடு விரல், பின்னர் சிறு விரல், இறுதியாகப் பெருவிரல் என்று ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் (தர்த்தீப்) வெட்ட வேண்டும் என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு வழமை காணப்படுகிறது.
ஆனால், மார்க்க ரீதியாக இப்படி நகம் வெட்டுவதற்கு எந்தவிதமான பிரத்தியேகமான வரிசை முறைகளோ அல்லது தர்த்தீபுகளோ கிடையாது. இது முற்றிலும் அடிப்படையற்ற ஒரு செய்தியாகும். இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி, இமாம் அல்-இராகி, இமாம் இப்னு தகீக் அல்-ஈத் போன்ற மாபெரும் ஹதீஸ் கலை அறிஞர்கள், நகம் வெட்டும் வரிசை முறை குறித்து வரும் செய்திகளை "அடிப்படையற்ற, ஆதாரமற்ற செய்திகள்" என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
இஸ்லாத்தின் பொதுவான சுன்னாவைப் பொறுத்தவரை, எந்தவொரு தூய்மையான நற்செயலையும் வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும். அந்த அடிப்படையில், நாம் வலது கையின் நகங்களை முதலில் வெட்டிவிட்டு, பின்னர் இடது கையின் நகங்களை வெட்டலாம். இதுவே மார்க்கம் காட்டித் தரும் பொதுவான சுன்னாவாகும். இதைத் தவிர்த்து, விரல்களுக்கென்று எந்தவொரு பிரத்தியேகமான தர்த்தீபும் (வரிசையும்) இஸ்லாத்தில் கிடையாது.