மருத்துவக் காப்புறுதி (Health Insurance) உட்பட எந்தவொரு வர்த்தகக் காப்புறுதியாக இருந்தாலும் அது அடிப்படையிலேயே இஸ்லாத்திற்கு முரணானதாகும் . இதில் பிரதானமாகப் பல மார்க்கத் தடைகள் உள்ளன.
1. சூதாட்டம் (கிமார்): காப்புறுதி என்பது அப்பட்டமான ஒரு சூதாட்டமாகும். நூறு நபர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துகிறார்கள்; அதில் விபத்து அல்லது நோயால் பாதிக்கப்படும் பத்து பேருக்கு மட்டும் அந்த முழுத் தொகையும் ஒரு அதிர்ஷ்டம் போல் செல்கிறது. பாதிப்பு ஏற்படாத தொண்ணூறு பேரின் பணம் முழுவதும் காப்புறுதி நிறுவனத்தை நடத்துபவர்களைச் சென்றடைகிறது. இது ஒரு வகையான சூதாட்டமேயாகும் .
2. வட்டி (ரிபா): நீங்கள் செலுத்தும் தொகையை விடக் குறைவான தொகையையோ அல்லது அதிகமான தொகையையோ பெறுவது வட்டியின் அடிப்படையாகும் . நூறு பேரிடமிருந்து பெற்ற பணத்தை, எவ்வித மார்க்க உரிமையுமின்றிப் பிறரது பணமாகப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.
3. தேவையற்ற நிபந்தனைகள் (சுரூத் பாத்திலா): உங்களுடைய சொந்தப் பணத்தைக் கூட நீங்கள் திரும்பப் பெற முடியாத அளவிற்கான மோசமான மற்றும் அநியாயமான நிபந்தனைகள் அதில் காணப்படுகின்றன . மக்கள் மத்தியில் பணப்பயத்தை ஏற்படுத்தியே காப்புறுதி நிறுவனங்கள் இதனை மார்க்கெட்டிங் செய்கின்றன .
தற்காலத்தில் "இஸ்லாமிய காப்புறுதி (Takaful)" என்று அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களும் வெறும் பெயர் மாற்றங்களே தவிர, நடைமுறையில் அவைகளும் வட்டி மற்றும் சூதாட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன . "தஆவுன்" (ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது) என்ற பெயரில் இது அறிமுகப்படுத்தப்பட்டாலும், யதார்த்தத்தில் நூறு பேர் பணத்தைப் போட்டு, பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை நிறுவனமே அபகரித்துக் கொள்ளும் மோசடிதான் அங்கு அரங்கேறுகிறது . உண்மையான உதவி என்றால் மீதமுள்ள பணம் லாபமாக நிறுவனத்திற்குச் செல்லக் கூடாது; மாறாக காப்புறுதி செய்தவர்களுக்கே திரும்பப் பெறப்பட வேண்டும். அப்படி எந்த நிறுவனமும் செய்வதில்லை . எனவே, இதுவும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றே ஆகும் .
ஆனால், ஒருவர் வெளிநாட்டில் பணிபுரியும் போது அந்நிறுவனம் கட்டாய மருத்துவக் காப்புறுதியை வழங்கினாலோ, அல்லது விசா பெறுவதற்கோ, வாகனம் வாங்கும் போது காப்புறுதி செய்வது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலோ, அத்தகைய தவிர்க்க முடியாத சட்ட நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகும் போது மாத்திரம் அதனைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் சலுகை உண்டு. தாமாகவே விரும்பிப் பாதுகாப்பிற்காக எந்தவொரு காப்புறுதியையும் செய்வது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டதாகும் .