நாமே அழிந்து போனாலும் ஹவாரிஜ்களுக்கு எதிராக காபிர்களின் உதவியைப் பெறக்கூடாது என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. "உங்களுடைய கைகளாலேயே உங்களை அழிவில் ஆக்கிக் கொள்ள வேண்டாம்" என்று குர்ஆன் வசனம் கூறுகிறது.
இதன் அடிப்படையில் பார்த்தால், ஹவாரிஜ்களுடைய பலம் அதிகரித்து, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இஸ்லாமிய நாடே முழுமையாக அழிந்து போகும் என்ற சூழ்நிலை வந்தாலும் பரவாயில்லை, நீங்கள் உதவி தேடக்கூடாது என்று மார்க்கம் சொல்லாது. காபிருக்கும் ஹவாரிஜுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஹவாரிஜ் மார்க்கத்தின் பெயராலேயே முஸ்லிம்களை அழிக்க வருகிறான். ஆனால் உதவி தேடப்படும் காபிர், முஸ்லிம்களை அழிக்காமல், அவர்கள் பாட்டுக்கு அவர்கள் மார்க்கத்தையும் நாட்டையும் நிர்வகிக்கட்டும் என்று ஒதுங்கியிருக்கிறான். இந்த மாதிரி நேரத்தில் ஹவாரிஜ்கள்தான் மிகவும் மோசமான எதிரிகள்.
ஹவாரிஜ்களைப் பொறுத்தவரைக்கும் அவர்களது முதல் இலக்காக எப்பொழுதும் முஸ்லிம்கள்தான் இருப்பார்கள். ஆனால் காபிர்களைப் பொறுத்தவரைக்கும் எப்பொழுதும் முஸ்லிம்கள்தான் அவர்களது முழு இலக்கு என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் காபிர்கள் (உதாரணமாக கிறிஸ்தவர்கள்) முஸ்லிம்களோடு ஒத்து வருவார்கள். எதிர்காலத்தில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து ஒப்பந்தம் செய்து யூதர்களை அழிப்பார்கள் என்ற செய்தியை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். அதுபோல ரசூல் (ஸல்) அவர்கள் யூதர்களோடு ஒப்பந்தம் செய்து மக்கா முஷ்ரிக்குகளை எதிர்த்தார்கள் என்பதையும் வரலாற்றில் பார்க்கிறோம். எனவே இவ்வாறான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது.
ஒரு இஸ்லாமிய நாடு, காபிர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் தனித்து நின்று ஹவாரிஜ்களை எதிர்க்க முடியும் என்றால், அவ்வாறுதான் எதிர்க்க வேண்டும். ஆனால், இன்னொரு நாடோடு சேர்ந்துதான் ஒரு முஸ்லிம் நாடு தனது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கிறது என்றால், அவ்வாறு உதவி பெறுவது தவறில்லை. ஒரு நாட்டுக்கு உள்ள சட்டம் தான் ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும். ஹவாரிஜ்களுடைய பார்வையில் நான் கொல்லப்பட வேண்டியவன். அந்த நேரத்தில் எனக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு காபிர் ஆயுதத்தோடு எனக்கு உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறான் என்றால், அவனிடம் "நீ காபிர், இவனால் செத்தாலும் சாவேனே தவிர உன்னிடம் உதவி தேட மாட்டேன்" என்று சொல்லக் கூடாது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உள்ளத்தில் ஈமானை உறுதியாக வைத்துக்கொண்டு கொள்கைக்கு மாற்றமான குஃப்ரான வார்த்தையைச் சொல்வதற்குக் கூட இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அப்படி இருக்கின்ற நேரத்தில், ஒரு காபிரிடத்தில் உதவி தேடியாவது அந்த ஹவாரிஜின் தாக்குதலில் இருந்து நான் தப்ப முடியுமாக இருந்தால் மார்க்க ரீதியாக அதில் எந்தத் தவறும் இல்லை. ஹவாரிஜின் முதல் இலக்கு முஸ்லிம்கள்தான்; ஆனால் உதவி செய்யும் காபிர் எப்பொழுதும் என்னைக் கொல்ல வேண்டும் என்ற இலக்கோடு இருக்க மாட்டான் என்ற இந்த வித்தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.