இன்றைய நவீன காலத்தில் ஹதீஸ் கலையிலே ஆய்வு செய்து தரம் பிரிப்பதில் மிகப்பெரிய ஒரு அறிஞராக வாழ்ந்து மரணித்தவர்தான் ஷேக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள். கடந்த கால அறிஞர்களான இமாம் திர்மிதி, இமாம் ஹாகிம் போன்ற ஒவ்வொருவருக்கும் ஹதீஸ் கலையில் எப்படி பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான அணுகுமுறைகள் இருந்தனவோ, அதேபோன்று ஷேக் அல்பானி அவர்களுக்கும் சில தனிப்பட்ட ஆய்வு அணுகுமுறைகள் இருந்தன.
பல ஹதீஸ் கலை அறிஞர்களுடைய பார்வை என்னவென்றால், ஷேக் அல்பானி அவர்கள் பலகீனமான ஹதீஸ்களைத் தொகுத்து எழுதிய ''ஸில்ஸிலதுல் அஹாதீஸித் ழயீஃபா'' என்ற நூலில் செய்துள்ள விமர்சன முறைமைகள், அவர் ஸஹீஹான ஹதீஸ்களுக்காக எழுதிய நூலில் உள்ள விமர்சனங்களை விட மிகவும் பலமானது என்பதாகும். ஷேக் அல்பானி அவர்கள் ஒரு செய்தியை பலகீனமானது (ழயீப்) என்று கூறினால், அது பெரும்பாலும் நிச்சயமாகவே பலகீனமாகத்தான் இருக்கும் என்பது ஹதீஸ் துறை மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியில் உள்ள பொதுவான நிலைப்பாடாகும்.
ஆனால், அவர் ஒரு செய்தியை ''ஹஸன்'' (அழகானது / ஏற்றுக்கொள்ளத்தக்கது) என்று தரப்படுத்தும் போது, அதில் சில வேளைகளில் பலகீனங்கள் இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஏனெனில், துணை ஆதாரங்கள் (ஷவாஹிதுகள், முத்தாபஆத்துகள்) மற்றும் கிளை அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்டு பலவீனமான ஒரு செய்தியை பலப்படுத்துகின்ற விஷயத்தில் அவரிடம் சில பிழைகள் நடந்திருக்கலாம் என்பது அவர்களின் பார்வையாகும். எனினும், ஹஸன் தரத்தில் விமர்சிக்கக்கூடிய அந்த இடங்களில் ஷேக் அல்பானிக்கு மட்டுமல்ல, எல்லா அறிஞர்களுக்குமே இத்தகைய முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும். எனவே, அவர் ழயீப் ஆக்கும் ஹதீஸ்கள் நிச்சயமாக பலகீனமானவை என்ற அடிப்படையில் நாம் தாராளமாக அவரது ஆய்வுகளை எடுத்துக் கொள்ளலாம்.