கடமையான குளிப்பின் போது, பெண்களாக இருந்தாலும் கட்டாயமாகத் தலையில் தண்ணீர் முழுமையாகப் படும்படி ஊற்றித்தான் குளிக்க வேண்டும். தலை முழுமையாக நனையாமல் குளிப்பு நிறைவேறுவதில்லை.
ஆரம்ப காலத்தில், "பெண்கள் குளிக்கும் போது கட்டிய முடியை அவிழ்த்துவிட்டுத்தான் குளிக்க வேண்டும்" என்று அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியபோது, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அதைக் கடுமையாகக் கண்டித்து, "அப்படியென்றால் அவர்கள் மொட்டையடித்துக் குளிக்கச் சொல்லலாமே!" என்று கூறினார்கள். இதிலிருந்து முடியை அவிழ்த்துவிட்டுத்தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை; கட்டிய முடியோடு குளிப்பதில் தவறில்லை என்பது உறுதியாகிறது. ஆனால், அதேநேரம் முடியின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் படுவது கட்டாயமாகும். தலையில் தண்ணீர் படாமல் குளித்தால் அது கடமையான குளிப்பாகக் கருதப்பட மாட்டாது.