வெளிநாட்டில் ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்காக காயிப் ஜனாஸா தொழுவதைப் பொறுத்தவரைக்கும், அவருக்கு மரணித்த ஊரில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அவருக்கு நாம் காயிப் ஜனாஸா தொழலாம். மரணித்த இடத்தில் அவருக்கு ஏற்கனவே ஜனாஸா தொழுவிக்கப்பட்டிருந்தால், நாம் அவருக்காக இன்னொரு ஊரில் ஜனாஸா இல்லாத நிலையில் மீண்டும் தொழ முடியாது.
இதற்கான தெளிவான ஆதாரம் என்னவென்றால், அபிசீனியாவில் நஜ்ஜாஷி மன்னர் மரணித்த போது ரசூல் (ஸல்) அவர்கள் மதீனாவில் அவருக்கு ஜனாஸா தொழுவித்தார்கள். நஜ்ஜாஷி மன்னர் கிறிஸ்தவ ஆட்சியின் கீழ் இஸ்லாத்தை ஏற்று வாழ்ந்தவர் என்பதால், அவரது மரணத்தின் போது அங்கு அவருக்கு நிச்சயமாக ஜனாஸா தொழுவிக்கப்பட்டிருக்காது. தொழப்படாத ஒரு ஜனாஸாவுக்கே நபிகளார் இவ்வாறு தொழுவித்தார்கள் என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
மேலும், நபியவர்கள் ஒரு சில ஜனாஸாக்களுக்குப் பின்னால் சென்று தொழுத நிகழ்வுகள் ஹதீஸ்களில் வருகின்றன. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில் நபியவர்கள் நேரடியாக அந்த மையவாடிக்குச் சென்று குறிப்பிட்ட அந்த கபருக்கு முன்னால் நின்றே தொழுவித்தார்கள்; ஜனாஸாவோ கபரோ முன்னால் இல்லாமல் நபியவர்கள் தொழவில்லை. எனவே, வெளிநாட்டில் மரணித்து அங்கேயே ஜனாஸா தொழுவிக்கப்பட்ட ஒருவருக்கு, இங்கு ஜனாஸா இல்லாமல் (காயிப் ஜனாஸா) தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படையான ஆதாரமும் கிடையாது.