மூக்கு வழியாக மருந்து விடுவதனால் பொதுவாக நோன்பு முறியாது. அதாவது, மூக்கைச் சுத்தப்படுத்துவதற்காகவோ, புண்களை ஆற்றுவதற்காகவோ, அடைப்புகளை நீக்குவதற்காகவோ மருந்து இடுவதில் தவறில்லை. ஆனால், அந்த மருந்து தொண்டைக்குழியைக் கடந்து சென்று, அதன் சுவையைத் தொண்டையில் உணருகின்ற நிலை ஏற்பட்டால் நோன்பு முறிந்துவிடும்.
கண், காது வழியாக மருந்து விடுவதைப் பொறுத்தவரை அறிஞர்களிடையே பெரிய கருத்து வேறுபாடில்லை; தாராளமாக விடலாம். ஆனால், மூக்கு வழியாக விடும் மருந்து மிக எளிதாகத் தொண்டையைச் சென்றடைய வாய்ப்புள்ளது என்பதாலேயே இதில் கவனமாக இருக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உளுச் செய்யும் போது "நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர, மூக்கிற்கு நீர் செலுத்துவதை ஆழமாகச் செய்யுங்கள்" என்று கூறினார்கள். இதன் காரணம், நோன்பாளியாக இருக்கும் போது மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினால் அது தொண்டைக்குள் சென்றுவிட வாய்ப்புள்ளது என்பதே. எனவே, தொண்டைக்குழியில் சுவை உணராத வண்ணம் இருக்கும் வரை மூக்கில் மருந்து விடுவது அனுமதிக்கப்படும்; சுவையை உணர்ந்தால் நோன்பு முறிந்ததாகவே கருதப்படும்.