முபாஹலா என்பது, மார்க்க ரீதியான ஒரு விவாதத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்லியும் எதிர்த்தரப்பினர் அதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில், சத்தியத்தில் இருப்பவர் தன் குடும்பத்தாரையும், எதிர்த்தரப்பினர் அவரது குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு, "நம்மில் யார் பொய்யராக இருக்கிறாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபமும் அழிவும் உண்டாகட்டும்" என்று இறைவனிடம் சாபப் பிரார்த்தனை செய்வதாகும். நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு முபாஹலா செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வழிகாட்டியது.
ஆனால், மக்கள் மத்தியில் உள்ள தவறான புரிதல் என்னவென்றால், முபாஹலா செய்தவுடன் பொய்யர் உலகத்திலேயே உடனடியாக கண்முன்னால் அழிந்து நாசமாகிவிடுவார் என்பதாகும். குர்ஆனிலோ சுன்னாவிலோ அப்படி உலகத்திலேயே அழிவு வரும் என்று எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை. கணவன் மனைவிக்கிடையில் விபச்சாரக் குற்றச்சாட்டு வரும்போது சாட்சியங்கள் இல்லாத நிலையில் செய்யப்படும் ''முலாஅனா'' (சாபப் பிரார்த்தனை) போன்றதுதான் இதுவும். பொய் சொன்னவர் மீது இறைவனின் சாபம் இறங்கும் என்பது உறுதி; ஆனால் அதற்காக வியாபார நஷ்டம் போன்ற உலகியல் சோதனைகளை எல்லாம் முபாஹலாவின் உடனடி விளைவுகள் என்று நாமாகவே கற்பனை செய்துகொள்ளக் கூடாது. இது ஹக்கு (சத்தியம்) எது, பாத்தில் (அசத்தியம்) எது என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் ஒரு இறுதிக்கட்ட மார்க்க நிலைப்பாடாகும்.