ஸகாத் யாருக்குக் கொடுக்கலாம் என்பதற்கு இஸ்லாம் ஒரு தெளிவான அளவுகோலை வகுத்துள்ளது. எமது நேரடிப் பராமரிப்பிலும், எமது கட்டாயச் செலவீனத்தின் கீழும் யார் இருக்கிறார்களோ (மனைவி, பிள்ளைகள்), அவர்களுக்கு நமது ஸகாத் பணத்தைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அவர்களுக்குச் செலவழிப்பது எமது அடிப்படைக் கடமையாகும். தாய், தந்தையருக்கு நாம் செலவழிப்பது கடமை என்றாலும், அவர்களைக் கவனிப்பதற்கு எமது வருமானம் போதாத பட்சத்தில் அவர்களுக்கு நமது ஸகாத்திலிருந்து கொடுக்கலாம்.
ஒரு கணவன் தன் மனைவிக்கோ அல்லது தன் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளுக்கோ ஸகாத் கொடுக்க முடியாது. ஆனால், மனைவி தனது ஸகாத் பணத்தைக் கணவனுக்கோ, அல்லது வறுமையிலிருக்கும் தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கலாம் (ஏனெனில் குடும்பப் பராமரிப்பு செலவு பெண்ணின் மீது கடமையல்ல). அதேபோல, பிள்ளைகள் திருமணமாகித் தனிக்குடித்தனம் சென்று வறுமையில் இருந்து, அவர்களுக்குச் செலவழிக்க வேண்டிய நேரடிப் பொறுப்பு தந்தைக்கும் இல்லாத நிலையில், தந்தையும் தனது ஸகாத் பணத்தை வறுமையிலுள்ள அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்.