பிறை விவகாரம் என்பது முற்றுமுழுதாக ''இஜ்திஹாத்'' (ஆய்வு) செய்வதற்கு உட்பட்ட ஒரு மார்க்க மஸ்அலாவாகும். இதில் நேரடியாக "உலகம் முழுவதற்கும் ஒரே பிறைதான்" என்றோ அல்லது "ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனிப் பிறைதான்" என்றோ குர்ஆனிலோ சுன்னாவிலோ நேரடியான, அறுதியான எழுத்துப்பூர்வமான (நஸ்) ஆதாரங்கள் இல்லை.
உள்ள ஆதாரங்களை அறிஞர்கள் தத்தமது ஆய்வின் மூலம் பலவாறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவே பல காலங்களாக இதில் கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. நேரடியாக ஆதாரம் (நஸ்) இல்லாத இத்தகைய ''இஜ்திஹாத்'' மஸ்அலாக்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை வழிகேடு (ழலாலத்) என்று சொல்வது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ''மஸாயிலுல் கிலாஃபிய்யா'' (ஆதாரங்கள் இருந்து ஒருவருக்குக் கிடைக்காமல் ஏற்படும் முரண்பாடு) என்பதற்கும், ''மஸாயிலுல் இஜ்திஹாதிய்யா'' (நேரடி ஆதாரம் இல்லாததால் புரிதலில் ஏற்படும் முரண்பாடு) என்பதற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும்.