ரசூல் (ஸல்) அவர்கள் "மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்" என்று கூறியுள்ளார்கள். ''வளர விடுங்கள்'' என்பதன் அர்த்தம், அதனை முற்றாகத் தொடவே கூடாது என்பதல்ல. தாடியை வளர்த்து அதனை அழகுபடுத்துவதும் அதில் அடங்கும். பொதுவாக வீடுகளில் மரம் வளர்க்கிறோம் என்று சொன்னால், அதனைச் சுத்தப்படுத்தி, கத்தரித்து, நல்ல முறையில் பராமரிப்பதும் அதில் அடங்குமே தவிர, காடு போல வளர விடுவது அல்ல.
இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) ஆகிய இருவருமே தங்களது தாடியை ஒரு பிடி பிடித்து, அதற்கு கீழே உள்ளதை வெட்டி அழகுபடுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் வெட்டினார்கள் என்பதனாலேயே நாமும் வெட்டச் சொல்லவில்லை, மாறாக அந்த ஹதீஸை அவர்கள் புரிந்து செயல்பட்ட விதமே அதுதான். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களும், இப்னு உமர் (ரழி) செய்ததைப் போன்று ஒரு பிடி பிடித்து வெட்டலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.
ஒரு பிடிக்கு மேல் வளர்ப்பது பித்அத் என்று ஷைக் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறிய நிலைப்பாட்டை நாம் ஏற்கவில்லை; அது ஒரு கடுமையான நிலைப்பாடாகும். எனினும், ஒருவருடைய தாடி ஒரு பிடி என்ற அளவுக்கு முழுமையாக வளர்ந்த பின்னால், அதனைச் சாதாரணமாக வெட்டி அழகுபடுத்திக் கொள்வதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை. அது பிழையாகாது.