பெண்களுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய மிக முக்கியமான ஒரு உபதேசம் தான் தஸத்துர் (தங்களை மறைந்து வாழுதல்). சமுதாயத்திலே பெண்களுக்கு எல்லாவிதமான கடமைகள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கு இஸ்லாம் அனுமதித்தாலும், ஒழுக்கம் என்று வருகிற நேரத்தில் இயன்ற அளவுக்கு அந்நிய ஆண்களை விட்டு தூரமாக ஒதுங்கி இருப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில், Profile Picture ஊடாக தங்களது முகத்தை (Face) போடுவதோ அல்லது அதைத் திருப்பி ஹிஜாபுடைய பின்பக்கத்தை போடுவதோ, எதுவாக இருந்தாலும் அது அந்தப் பெண்ணை அடையாளப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாகவே அமையும். எனவே, இவை இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
மார்க்க ரீதியாக போட்டோ பிடித்தல் ஹராமா ஹலாலா என்ற பகுதியைத் தாண்டி, ஒரு பெண் தஸத்துர் பேணி வாழ வேண்டும், அஜ்னபியான ஆண்களை விட்டும் அவர்கள் இயன்ற அளவுக்கு ஒதுங்கி வாழ வேண்டும் என்கின்ற அடிப்படையில் இது போன்ற Profile Picture-களை அவர்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். உண்மையிலேயே ஒரு மார்க்கப் பற்றை விரும்பக்கூடிய பெண்களாக இருந்தால், தங்களை அடையாளப்படுத்தாமல் இருப்பதற்கான எல்லா முயற்சியும் செய்ய வேண்டும். இதுபோன்ற இணையதளங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைமை இருந்தால், யார் தன் குடும்பத்தவர்களோ அவர்களோடு மட்டும் தன் அறிமுகத்தை சுருக்கிக் கொண்டு, மற்றவர்கள் தன்னை அடையாளம் காணாத வகையில் இருப்பதுதான் மிகவும் சிறந்தது; அது உள்ளத்தில் அவங்களுக்கு ஒரு ஹிஜாப் இருப்பதை காட்டுகிறது. தன்னை அடையாளப்படுத்துகின்ற அமைப்பிலான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் போடுவது பொருத்தமானதல்ல.
அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில், "உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தங்கி இருங்கள், ஆரம்ப கால ஜாஹிலிய காலத்தில் அலங்காரமாக வெளிக்கிளம்பிச் சென்றது போல் செல்ல வேண்டாம்" என்று சொல்கிறான். இதற்கான அர்த்தம், இயன்ற அளவுக்கு வீட்டிலேயே தங்கி இருங்கள் என்பதுதான். தேவை வந்தால் வெளியே போவதற்கு நபிகளார் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் தேவையற்ற முறையில் ஒரு பெண் வெளியாவது என்பது, அவர்களைப் பற்றி ஒரு தப்பெண்ணத்தை உண்டாக்கும்; ஆண்களுக்கு மத்தியில் வரவேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் என்ற தவறான எண்ணங்களை விதைக்கும் என்பதனாலேயே ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள். எனவே இணையதளங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களது அடையாளங்களை மறைத்து வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. எதற்காகவென்றால், உலகத்தில் உள்ள எல்லோருமே கெட்டவர்கள் என்பதற்காக அல்ல; நல்லவர்கள் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவும், கெட்டவர்கள் தவறான முறையில் இவர்களை அணுகி விடக்கூடாது என்பதற்காகவுமேயாகும். சிலர் இன்னொரு பெண்ணுடைய அல்லது கூகுளில் கிடைக்கக்கூடிய போட்டோக்களை எல்லாம் ப்ரொபைலாகப் போடுகிறார்கள்; இவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். அஜ்னபிகளை விட்டு அடையாளப்படாமல் எந்தெந்த வழிகளில் இருக்க முடியுமோ, அந்த விஷயங்களில் ஒரு முஸ்லிம் பெண் முழுமையான முயற்சி எடுக்க வேண்டும்.