இது குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸா என்று கேட்டால், இது குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ் அல்ல; குர்ஆனுக்கு "மாற்றமான" ஹதீஸ். குர்ஆனுக்கு முரண்படுதல் என்பதற்கும் மாற்றமாக இருப்பதற்கும் நீங்கள் வித்தியாசம் விளங்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக அல்லாஹுத்தஆலா "திருட வேண்டாம்" என்கிறான், ஒருத்தர் திருடுகிறார் என்றால் அவர் குர்ஆனுக்கு மாற்றம் செய்கிறார். குர்ஆனுக்கு முரண்படுதல் என்றால், குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு எதிராக இன்னொரு செய்தியைச் சொல்வது (உதாரணமாக குர்ஆன் ஒரு சட்டம் சொல்ல, ஹதீஸ் நேர்மாறான ஒரு சட்டம் சொல்வது). ஆனால் இங்கு குர்ஆனில் இருந்த ஒரு வசனம் காணாமல் போய்விட்டது என்று சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
இதைச் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி நாம் படிக்க வேண்டும். குர்ஆனை முழுமையாகத் தொகுப்பது என்ற முடிவு அபூபக்கர் (ரழி) அவர்களின் காலத்தில்தான் வந்தது. ரசூலுல்லாஹ் காலத்தில் வஹீ இறங்க இறங்க சஹாபாக்கள் ஆங்காங்கே எழுதிக்கொண்டார்கள்; எல்லாரிடமும் முழு குர்ஆனும் எழுதப்படவில்லை. ஆனால் அநேகர் மனனம் செய்திருந்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்தில் இந்த எழுத்துப் பிரதிகளை ஒன்றுசேர்த்து, எந்தெந்த வசனங்களை எழுதுவது, எவற்றை எழுதக்கூடாது என்ற ஒரு முடிவுக்கு வந்து அதிகாரப்பூர்வமாகத் தொகுத்தார்கள்.
இந்த இடத்தில் "மாற்றப்பட்ட வசனங்கள்" (நாஸிக், மன்ஸூக்) என்றால் என்ன என்று புரிய வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறான்: "நாங்கள் எந்த வசனத்தை மாற்றினாலும் அல்லது மறக்கடிக்கச் செய்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம்." மாற்றியது அல்லது மறக்கடிக்கச் செய்தது என்று இரண்டு விஷயங்களை அல்லாஹ் சொல்கிறான்.
சில வசனங்களின் "சட்டம்" மட்டும் மாற்றப்பட்டிருக்கும், ஆனால் அந்த வசனம் குர்ஆனில் தொடர்ந்து ஓதப்படும் (உதாரணமாக: போதையுடையவர்களாகத் தொழுகையை நெருங்க வேண்டாம் என்ற வசனம்). இன்னும் சில வசனங்கள் குர்ஆனில் இறங்கி, பின்னர் அல்லாஹுத்தஆலா அந்த வசனத்தின் "ஓதலை" (Recitation) முற்றாக எடுத்துவிடுவான்; ஆனால் சட்டம் அமுலில் இருக்கும். இன்னும் சில வசனங்களின் "சட்டமும் மாற்றப்பட்டு, ஓதலும் மாற்றப்பட்டுவிடும்". அப்படி ஓதலும் சட்டமும் மாற்றப்பட்டால் அந்த வசனம் குர்ஆனில் இருக்காது. அதைத்தான் "அவ் நுன்சிஹா" (நாம் மறக்கடிக்கச் செய்தால்) என்று அல்லாஹ் கூறுகிறான். உஸ்மான் (ரழி) அவர்கள் குர்ஆனைத் தொகுக்கும்போது, ரசூல் (ஸல்) அவர்கள் எதை ஓதாமல் விட்டுவிட்டார்களோ (ஓதல் மாற்றப்பட்டதோ) அந்த வசனங்களை எழுத்து வடிவில் சேர்க்கவில்லை.
இப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் செய்திக்கு வருவோம். 10 முறை பால் குடித்தால் மஹரம் ஏற்படும் என்று ஆரம்பத்தில் குர்ஆன் வசனம் இறங்கியது; பின்னர் அந்த இடத்திற்கு "5 முறை பால் குடித்தால் மஹரம்" என்ற வசனம் இறங்கியது. இதிலிருந்து என்ன புரிகிறது? 10 முறை என்ற வசனத்தின் சட்டமும் மாற்றப்பட்டு ஓதலும் மாற்றப்பட்டது. 5 முறை குடித்தால் மஹரம் என்ற வசனத்தின் "ஓதல்" மாற்றப்பட்டு சட்டம் மட்டும் அமுலில் இருந்தது. ஆயிஷா (ரழி) சொல்கிறார்கள்: "இந்த அஞ்சு முறை பால் குடித்தால் என்ற வசனம் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் ரசூலுல்லாஹ் மௌத்தானார்கள்." இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், அந்த "ஓதல் மாற்றப்பட்டது" (Recitation Abrogated) என்பது ரசூல் (ஸல்) அவர்களின் மரண நேரத்திற்கு மிக நெருங்கிய நாட்களில்தான் நிகழ்ந்தது.
அதனால்தான் மக்களுக்கு அந்தச் செய்தி முழுமையாகச் சென்று சேர்வதற்கு தாமதமானது. மரண நேரத்தோடு நெருங்கிய காலத்தில் அது நிகழ்ந்ததால், சில மக்கள் அது ஓதப்படும் வசனம் என்று நினைத்து ஓதிக்கொண்டே இருந்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் குர்ஆனை மாற்றிவிட்டார்கள் என்றோ, குர்ஆனிலிருந்து ஒரு வசனம் திருடப்பட்டு காணாமல் போய்விட்டது என்றோ ஆயிஷா (ரழி) சொல்லவரவில்லை. ஆயிஷா (ரழி) அவர்களின் வாதமே அதுவல்ல. ஓதல் மாற்றம் என்பது மிகத் தாமதமாக, நபி (ஸல்) அவர்களின் மரணத் தறுவாயில் நடந்ததால் அந்தச் சட்டம் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது என்றுதான் விளக்குகிறார்கள்.
எனவே, அல்லாஹ் ஏன் ஓதலை மாற்றுகிறான், ஏன் சட்டத்தை மாற்றுகிறான் என்பதற்கு நாம் என்ன விளக்கம் சொல்கிறோமோ, அதுவே இதற்கும் பொருந்தும். இதை விடுத்து, பகுத்தறிவை முன்வைத்து குர்ஆனின் பாதுகாப்போடு இந்த ஹதீஸை மோதவிடுவதும், முரண்பாடு கற்பிப்பதும் அறியாமையாகும்.