வெள்ளிக்கிழமை குத்பா ஓதும்போது தூக்கம் வருவது தொடர்பாக, தூக்கம் வுழூவை முறிக்கக்கூடிய ஒன்றா என்பதில் அறிஞர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. சில அறிஞர்கள் சிறிய தூக்கமாக இருந்தாலும் ஆழமான தூக்கமாக இருந்தாலும் அது வுழூவை முறித்துவிடும் என்று கருதுகிறார்கள். இன்னும் சிலர் பொதுவாக தூக்கம் வுழூவை முறிக்காது என்கிறார்கள். மேலும் சிலர், ஒருவர் தனது பிட்டத்தை உறுதியாக நிலத்தில் வைத்து உட்கார்ந்து தூங்கினால் வுழூ முறியாது, சாய்ந்து கொண்டு தூங்கினால் வுழூ முறிந்துவிடும் என்று கூறுகிறார்கள். நான்காவதாக, சிறிய தூக்கம் வுழூவை முறிக்காது, ஆழ்ந்த தூக்கம் வுழூவை முறிக்கும் என்ற கருத்தும் உள்ளது.
இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்கிற போது, மிகச் சரியான (ராஜிஹான) கருத்தாகத் தோன்றுவது: ஒருவர் இருந்து கொண்டோ அல்லது சாய்ந்து கொண்டோ தூங்குகிறார், ஆனால் தன்னிலை மறக்கவில்லை (அதாவது ஆழ்ந்த உறக்கம் இல்லை, மேலோட்டமாக நடப்பதை எல்லாம் உணர்ந்து கொள்ளக்கூடியவாறு தூக்கம் இருக்கிறது) என்றால், அதனால் வுழூ முறியாது. ஆனால் தன்னிலை மறந்து ஆழ்ந்த தூக்கமாக அது இருக்குமாக இருந்தால் அது வுழூவை முறிக்கும் என்பதேயாகும். இந்த அடிப்படையில், ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் தன்னிலை மறந்து தூங்கினால், அவருடைய வுழூ முறிந்து விடுகிறது; மீண்டும் வுழூ செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நினைவு இருக்கிற அடிப்படையில், பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் இமாம் குத்பா ஓதும்போது, ஆழ்ந்து செல்வது குறைவு; சத்தமும் கேட்கும், பக்கத்தில் இருப்பவர்களுடைய நிலையும் புரியும். இந்த நிலையில் தூங்கினால் வுழூ முறியாது. ஆனால் தன்னிலை மறந்து தூங்கிவிட்டால் அவர் வுழூ செய்துகொள்வதே பொருத்தமானது.