கணவன் மரணித்தால், மனைவி இத்தா இருக்க வேண்டிய இடம் கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்த வீடாகும். அவர்கள் எந்த வீட்டில் வசித்து வந்தார்களோ, அந்த வீட்டில்தான் மனைவி இத்தா இருக்க வேண்டும் என்பது மார்க்கத்தின் பொதுவான சட்டமாகும்.
சில நேரங்களில் கணவனுடைய அனுமதியோடு மனைவி வெளிநாடுகளில் (உதாரணமாக மகன் அல்லது மகளின் வீட்டில்) தங்கியிருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கணவன் ஊரில் மரணித்துவிட்டால், அந்த மனைவி தான் தங்கியிருக்கும் மகனுடைய அல்லது மகளுடைய வீட்டிலேயே தனது இத்தாவை அனுஷ்டிக்கலாம். நிர்ப்பந்தமான சூழ்நிலை காரணமாக அவள் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டால், மஹ்ரமான துணையோடும் முழுப் பாதுகாப்போடும் ஊருக்கு வந்து கணவனுடைய வீட்டிலேயே இத்தாவைத் தொடரலாம்.
அதேநேரத்தில், கணவன் ஊரில் இருக்க, மனைவி சுற்றுலா (Tourism) அல்லது மருத்துவச் சிகிச்சை (Treatment) போன்ற தேவைகளுக்காக வெளிநாடு சென்றிருக்கும்போது கணவன் மரணித்தால், அவள் உடனடியாகத் தனது ஊருக்குத் திரும்பி வந்து கணவனுடைய வீட்டிலேயே இத்தா இருக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சையாக இருப்பின், அதனைப் பின்னர் தொடரலாம் என்ற நிலை இருந்தால் ஊர் திரும்பி இத்தா இருப்பதே அவசியமாகும்.