மக்கள் மத்தியில் "பெண்கள் வானத்தைப் பார்த்தவாறு மல்லாக்கப் படுக்கக் கூடாது" என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இதற்கென எவ்வித உறுதியான மார்க்க ஆதாரங்களும் இல்லை.
சில அறிஞர்கள் பெண்கள் மல்லாக்கப் படுப்பது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்று கூறி, அதனால் சில சைத்தானியக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற நியாயத்தை முன்வைக்கின்றனர். ஆனால் இது கூடாது என்பதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. மார்க்க வழிகாட்டலின்படி, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களுக்கு வசதியான முறையில் தூங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மல்லாக்கத் தூங்குவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்று அல்ல.
அதேநேரத்தில், குப்புறப் படுப்பது குறித்து ஒரு நபித்தோழரை நபி (ஸல்) அவர்கள் தட்டி எழுப்பி "இது நரகவாசிகளின் படுக்கை" என்று எச்சரித்த ஹதீஸ் காணப்படுகிறது. ஆயினும் இந்த ஹதீஸ் பலவீனமானது என இமாம் புகாரி போன்ற பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை பலவீனமானது என்று கருதுபவர்கள் தங்களுக்கு வசதியான முறையில் குப்புறப் படுப்பதிலும் குற்றமில்லை. இருப்பினும், வலது கன்னத்தில் வலது கையை வைத்துத் தூங்குவதே நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த மிகச் சிறந்த சுன்னாவாகும். எனவே முடியுமானவரை இந்த சுன்னத்தான முறையைப் பின்பற்றுவதே மிகவும் சிறந்தது.