குழந்தை பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுப்பது பெற்றோர் மீது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இந்த அகீகாவாக மாடு அல்லது ஒட்டகத்தைக் கொடுக்கலாமா என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பெரும்பாலான இமாம்கள் மாடு அல்லது ஒட்டகத்தையும் அகீகாவாகக் கொடுக்கலாம் என்று கருதினாலும், சில அறிஞர்கள் ஆடு மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகாவாக ஆட்டையே அறுத்துக் கொடுத்துள்ளார்கள்; அதேபோன்று தமது பேரப் பிள்ளைகளுக்கும் ஆட்டையே அகீகாவாகக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் ஆட்டைத் தவிர வேறு எதையும் கொடுத்ததாக எவ்வித ஆதாரங்களும் ஹதீஸ்களில் கிடையாது. மேலும், அகீகாவாக ஆடு கொடுக்கலாம் என்பதில் அறிஞர்களிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டபோது அவர்களும் ஒட்டகம் கொடுப்பதை விரும்பவில்லை என்று வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, நபிவழியைப் பின்பற்றும் அடிப்படையிலும், கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கும் விதத்திலும் அகீகாவாக ஆடு கொடுப்பதே மிகச் சிறந்ததும் சரியான நிலைப்பாடுமாகும்.