வட்டி என்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட, அல்லாஹ் மற்றும் அவனது தூதரோடு போர் தொடுப்பதற்கு நிகரான ஒரு பெரும்பாவமாகும். தற்காலத்தில் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக வங்கிகளை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், வட்டி இல்லாத முறையான நடப்புக் கணக்குகளைப் (Current Account) பேணுவதே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.
அறியாமையினாலோ அல்லது மாற்று வழி இல்லாமலோ சேமிப்புக் கணக்கில் (Savings Account) பணத்தை வைத்து, அதன் மூலம் வட்டிப் பணம் கணக்கில் வந்திருந்தால், அந்தப் பணம் நமக்குச் சொந்தமானதல்ல. அது முற்றிலும் ஹராமானதாகும். அந்தப் பணத்தை நாம் எந்தவொரு சொந்தத் தேவைக்கும் பயன்படுத்தக் கூடாது. அதேநேரத்தில், அந்த வட்டிப் பணத்தை வங்கியிலேயே விட்டுவிடவும் கூடாது, அதனை எரித்துவிடவும் மார்க்கத்தில் அனுமதியில்லை.
எனவே, அவ்வாறு கிடைக்கும் வட்டிப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து, எவ்வித நன்மையையோ அல்லது இபாதத்தையோ நாடாமல், பொதுவான தேவைகளுக்கு (பொது நலக் காரியங்களுக்கு) அதனைக் கொடுத்து அந்தப் பாவத்திலிருந்து முழுமையாக விடுபட்டுக் கொள்ள வேண்டும்.